முதல் டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. துவக்க வீரர்கள் உள்ளிட்ட 4 பேர் அடுத்தடுத்து வீழ்ந்துள்ளனர். மேலும் இங்கிலாந்திற்கும் 578 ரன்களை வாரிக் கொடுத்துள்ளது இந்தியா.
வாய்ப்பு கிடைக்காத யாதவ்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் ரவி அஸ்வின், நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஸ்பின்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாபாஸ் நதீமிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விளையாடாத குல்தீப்
கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் குல்தீப் இடம்பெற்றிருந்தார். ஆயினும் அவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரஹானே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வருத்தம் தெரிவித்த வாசிம் ஜாபர்
இந்நிலையில் தற்போது முதல் போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறாதது குறித்து தான் வருத்தம் மட்டுமே படமுடியும் என்றும் எந்தவகையில் உதவி செய்ய முடியாது என்றும் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஒரு பயோ பபளிலிருந்து மற்றொன்றிற்கு அவர் பயணம் மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் தனது திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குல்தீப்பிற்கு வாசிம் அறிவுறுத்தல்
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்றும் குல்தீப்பிற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாகவும் அவர் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் தன்னை நிரூபிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.