கோலி தலைமையில்
தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, விராட் கோலி தலைமையில் முதன்முறை இங்கிலாந்து சென்றது டீம் இந்தியா. 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், முதல் இரு போட்டிகளிலும் வென்று 2 - 0 என்று லீடிங்கில் இருந்தது இங்கிலாந்து. இந்திய அணி முற்றிலும் சரண்டராகி இருந்தது. அதிலும் இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி.
வலியும், வேதனையும்
இதனால், 3வது போட்டியிலேயே இங்கிலாந்து தொடரை வென்றுவிடும் என்பதே எக்ஸ்பெர்ட்ஸ் கணிப்பாக இருந்தது. ஆனால், அங்கு ஒருவன் தனி ஆளாக, அனைவரின் கற்பனைக்கும் முடிவுரை எழுதிக் கொண்டிருந்தான். அவனிடம் கோபம் இருந்தது. வலி இருந்தது. துணிச்சல் ரொம்பவே இருந்தது. எல்லாவற்றையும் மீறி, ஜெயிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த வலியும், வேதனையும் நட்டிங்காமில் எதிரொலித்தது.
300க்கும் மேல்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. அதில் விராட் கோலி 97 ரன்களும், ரஹானே 81 ரன்களும் எடுத்திருந்தனர். ஆண்டர்சன், பிராட் தலா, க்றிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தாலும், ஸ்பின்னர் அடில ரஷீத் டார்கெட் செய்யப்பட்டார். 9 ஓவரில் 1 விக்கெட் எடுத்திருந்தாலும் 46 ரன்கள். இதனால் தான் 300க்கு மேல் இந்தியாவால் மேனேஜ் செய்ய முடிந்தது.
ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்
ஆனால், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 5. நம்ப முடிகிறதா? அதனால் தான் இந்திய அணிக்கு ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் வேண்டும் என்பது. வரும் ஜுலை மாதம் இந்திய அணி விளையாடவுள்ள தொடரில், ஜடேஜா, அஷ்வின் என்று ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் இருந்தாலும், பாண்ட்யாவை காயம் காரணமாக நாம் மிஸ் செய்திருப்பது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். சரி விஷயத்துக்கு வருவோம்.
பிரம்மாண்ட வெற்றி
இப்போது இரண்டாவது இன்னிங்ஸ். இம்முறை மீண்டும் அதே வேகத்துடனும், நேர்த்தியுடனும் ஆடிய கோலி சதம் விளாசினார். 197 பந்துகளில் 103 ரன்கள். லோ ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா 52 ரன்கள் எடுக்க, 352 ரன்கள் சேர்த்தது இந்தியா. வெற்றிப்பெற அபார வாய்ப்பு. அதை கச்சிதமாக பயன்படுத்தியது இந்தியா. இரண்டாம் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டாக 203 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றிப் பெற்றது இந்திய அணி. எனினும், மீதமிருந்த இரு டெஸ்ட் போட்டிகளையும் இங்கிலாந்து வெல்ல, தொடரை 4 - 1 என்று கைப்பற்றியது. அதன் பிறகு இப்போது தான் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வட்டியும், முதலுமாக திருப்பிக் கொடுப்பாரா கோலி?