ரோஹித் - யுவராஜ் சிங்
இருவரும் சில நாட்கள் முன்பு சமூக வலைதளத்தில் நேரலையில் பேசிக் கொண்ட போது யுவராஜ் சிங், கிரிக்கெட் வீரர் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ்வை குறிப்பிட்டு சாதிய ரீதியிலான வார்த்தையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் செய்யும் சாஹல்
இது எல்லாம் சாஹலின் டிக்டாக் வீடியோக்களில் இருந்து தான் துவங்கியது. பிரபலமான இந்திய அணி கிரிக்கெட் வீரரான சாஹல், டிக்டாக் சமூக வலைதளத்தில் மிக வேடிக்கையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ரசிகர்கள் பலர் அதைக் கண்டால் சிரிக்கத் தோன்றவில்லை என அவரை கிண்டலும் செய்துள்ளனர்.
கோலி, கெயில் கிண்டல்
இந்திய அணி கேப்டன் கோலி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஆகியோர் கூட சாஹலின் வீடியோக்கள் மோசமாக இருப்பதாக அவரை கிண்டல் செய்து பேசி இருந்தனர். ஆனால், அவர்கள் அவரை தாக்கிப் பேசவில்லை.
யுவராஜ் சிங் பேச்சு
அதே போலவே சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி ரோஹித் சர்மாவிடம் கிண்டலாக பேசினார் யுவராஜ் சிங். ரோஹித் சர்மாவும் அதை சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டார். யுவராஜ் சிங் பேசுகையில், வட இந்தியாவில் குறிப்பிட்ட மக்களை குறிப்பிடும் ஒரு வார்த்தையை சொல்லி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றி பேசி உள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
அந்த வார்த்தை தான் பெரிய வினையை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வெளியாகி சில நாட்கள் கடந்த நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் அவர் அந்த வார்த்தையை பயன்படுத்தும் வீடியோ பகுதியை மட்டும் பகிர்ந்து, யுவராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி இருந்தனர்.
எந்த விளக்கமும் இல்லை
யுவராஜ் சிங் இதுவரை இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களோடு முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்தை எட்டி உள்ளது. ரஜத் கல்சன் என்பவர் இந்த விவகாரத்தில் யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
ரோஹித் சர்மா என்ன செய்தார்?
யுவராஜ் சிங் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாறாக அதை ஏற்றுக் கொண்டது போலவே நடந்து கொண்டார் என அடுத்த குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ரஜத் கல்சன்.
சிக்கலில் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்கிற்கு இந்த வழக்கால் சிக்கல் எழக்கூடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு ஆதரவாக நிதி திரட்ட வீடியோ பதிவிட்ட சர்ச்சை நடந்து முடிந்தது. தற்போது அவர் சாதிய ரீதியில் பேசியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
ரோஹித் சர்மாவுக்கும் பிரச்சனை
யுவராஜ் சிங்கிற்கு இது தனிப்பட்ட பிரச்சனை. ஆனால், ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கிறார். இந்த நிலையில், அவரும் இந்த விவகாரத்திற்குள் இழுக்கப்பட்டால் அது இந்திய அணி மற்றும் பிசிசிஐ-யும் பாதிக்கும்.