எங்கே நீக்கம்?
மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா மைதானம் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பின் மொஹாலி மைதானம், இரண்டிலும் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை மூடி வைத்தும், நீக்கியும் உள்ளனர்.
வீரர்களின் புகைப்படங்கள்
இந்த மைதானங்களில் கிரிக்கெட் ஆடிய பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள், அவர்கள் பரிசு, விருது வாங்கிய புகைப்படங்கள் என பல்வேறு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் இந்த மைதானங்களில் இடம் பெற்று இருந்தது.
காரணம் என்ன?
தற்போது காஷ்மீர் தாக்குதல் குறித்து வாய் திறக்காமல் இருந்து வரும் பாகிஸ்தான் பிரதமரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானை கண்டிக்கும் வகையிலும், தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா புகைப்படங்களை மூடி வைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறியுள்ளனர்.
ஆதரவு கருதி நீக்கம்
பஞ்சாப் கிரிக்கெட் அமைப்பு கூறுகையில், தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்களை நீக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
முந்தைய எதிர்ப்பு
இதுவரை இந்தியாவில் பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்கும் போது எல்லாம் பாகிஸ்தான் அணியுடன், இந்தியா கிரிக்கெட் ஆடக் கூடாது என்பதோடு கிரிக்கெட்டில் அதன் எதிர்ப்பு நின்று விடும்.
அதிக எதிர்ப்புக்கு காரணம்
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பின் கிரிக்கெட்டில் அதன் எதிரொலி அதிகமாக இருப்பதற்கு காரணம், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் பிரதமராக இருக்கிறார் என்பது தான்.
இம்ரான் கான் அமைதி
அவர் பதவியேற்ற பின் முதல் முறையாக மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆளாகி உள்ளது. இதன் பின் பாகிஸ்தான் நாட்டின் சதி இருக்கலாம் என கூறப்படும் நிலையில், அதை ஒப்புக் கொள்வது போல இம்ரான் கான் அமைதி காத்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு கோரிக்கை
கிரிக்கெட் மைதானங்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் மோதக் கூடாது என்ற குரல்கள் வலுத்து வருகிறது.