லண்டன்: இந்தியா மீது வைத்துள்ள மொத்த கோபத்தையும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இன்று காட்டி விட்டார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது அவர்கள் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது. என்ன ஒரு நேர்த்தியான பேட்டிங். குறிப்பாக இளம் பகார் சமான் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியையும் சேர்த்து வெறும் 4 ஒரு நாள் போட்டிகளில்தான் ஆடியுள்ளார் சமான. ஆனால் அவரது ஆட்டத்தில் அத்தனை புரபஷனல் டச், அபாரமான நுனுக்கம். பந்துகளைக் கணித்து அடித்த ஸ்டைல்.. வாவ் சொல்ல வைத்து விட்டார் சமான்.
நான்கு ஒரு நாள் போட்டிகளில் 2 அரை சதம் போட்டிருந்த அவர் இன்று பிரமாதமான சதத்தைப் போட்டு இந்தியாவை ஷாக்கில் ஆழ்த்தி விட்டார். லண்டன் மைதானமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்க இந்திய பவுலர்களை வதம் செய்து விட்டார் சமான்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரி்ல் சமான் ஆடிய முதல் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானது. அப்போட்டியில் அவர் 31 ரன்கள் எடுத்தார். ஆனால் இன்றைய போட்டியில் அவர் விஸ்வரூபம் எடுத்து விட்டார். இந்தியப் பந்து வீச்சை தண்டித்த அவர் 114 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இது அவரது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி சதமாகும்.
மேலும் இன்றைய போட்டியில் அவரும் அஸார் அலியும் இணைந்து 128 ரன்களைக் குவித்து புதிய சாதனை ஒன்றையும் படைத்தார். அதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே இதுதான் அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும்.
மரியாதையாக கோஹ்லி பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தால் இந்த அக்கப்போரை பார்க்க நேரிட்டிருக்காது!