டிஆர்எஸ் கிங்
குறிப்பாக, நேற்றைய போட்டியில் முதலில் களம் இறங்கிய டெல்லி 2 ஓவர்களின் போது, விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. வலுவான நிலைக்கு அந்த அணி எட்டக்கூடும் என்ற நிலையில் 3வது ஓவர் வீசப்பட்டது. அதில் பிரித்வி ஷா அவுட் இல்லை என்று அம்பயர் சொல்ல, எல்பிடபிள்யூ அவுட்டுக்காக டிஆர்எசை கையில் எடுத்தார் தோனி.
பந்துவீச்சில் மாயாஜாலம்
ரீப்ளேயில் பிரித்வி ஷா அவுட் என்று தெரிய வர டெல்லி அணியின் விக்கெட் வீழ்ச்சி தொடங்கியது. அதன்பிறகு வந்த வீரர்கள் எல்லாம் சென்னையின் மாயாஜால பந்துவீச்சில் சிக்கி சுழன்றனர். ரிஷப் பன்ட் மட்டும் 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.அவருக்கு ஆறுதலாக முன்ரோ 27 ரன்களை எடுத்தார்.
சென்னை வெற்றி
மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. வருவதும், போவதுமாக இருந்தனர். இறுதியாக, டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை அணி நிதானமாக ஆடி, வெற்றி இலக்கை எட்டியது.
சென்னைக்கு 100
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை அணிக்கு இது 100வது வெற்றியாகும். அதாவது, 2008ம் ஆண்டு முதல் இதுவரை விளையாடிய போட்டிகளில் நேற்றுடன் சென்னை அணி 100 வெற்றிகளை பெற்றிருக்கிறது. சென்னை அணியில் முதல் வெற்றியே ஒரு சூப்பர் ரகம் என்று சொல்லலாம்.
முதல் போட்டி எப்போது?
தோனியின் புகழ் அப்பொழுதுதான் உச்சக்கட்டமாக இருந்த நேரம். சென்னை அணி தோனியை கேப்டனாக தேர்ந்தெடுத்திருந்தது. அதன்பிறகு முதல் போட்டியில் பஞ்சாபை எதிர்கொண்டது. அந்த போட்டியில் சென்னையின் மைக் ஹசியின் பிரம்மாண்டமான 116 ரன்களுடன் 20 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது.
மறக்கமுடியாத போட்டி
சேஸ் செய்த பஞ்சாப் 207 ரன்கள் மட்மே எடுக்க 33 ரன்களில் சென்னை சூப்பர் வெற்றி பெற்றது. சென்னை அணியின் ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத போட்டி என்றால் அந்த முதல் போட்டியை கூறலாம். அதன்பிறகு பல போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றது சென்னை.
ரசிகர்கள் ஆவல்
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த சென்னை அணி குவாலிபயர் 2 போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுள்ளது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் 100 வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்திருக்கிறது. நாளைய இறுதிப்போட்டியில் பரம வைரியான மும்பையை எதிர்கொள்கிறது சென்னை. மும்பையை பழி தீர்க்கும் சென்னை என்று ரசிகர்களும் காத்துள்ளனர்.