சிறப்பான பேட்டிங்
இப்போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர். இறுதிக் கட்டத்தில் ரஸல் 20 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் விளாசி சிறப்பான கேமியோ ரோல்ஸ் விளையாட, அந்த அணி 171 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் பிராவோவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட சாம் கர்ரனின் 4 ஓவர்களில் 56 ரன்கள் விளாசப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் தொடக்க வீரர்களாக இன்னிங்ஸை தொடங்கினர்.
செம பார்ட்னர்ஷிப்
இதில், ருதுராஜ் - டு பிளசிஸ் ஜோடி வழக்கம் போல் எதிரணி பவுலர்களை அடித்து விளாசத் தொடங்கியது. ஃபாஸ்ட், ஸ்பின் என்று மாறி மாறி கொல்கத்தா பவுலர்களை இருவரும் விளாசினார்கள். குறிப்பாக, கொல்கத்தா அணியின் பலமான மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஓவர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதிலும், முதல் 2 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது. எகானமி 12.50. எனினும், ரஸல் ஓவரில் எட்ஜ் ஆன ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 2 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் கேட்ச்சானார். டு பிளசிஸ் சிக்ஸர்கள் அடிக்கவில்லை என்றாலும் 7 பவுண்டரிகளை விளாசியிருந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.
ஏமாற்றிய தோனி
பிறகு சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கியது. மொயீன் அலி 32 ரன்களிலும், அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 10 ரன்னிலும் அவுட்டாக, போட்டி மெல்ல மெல்ல கொல்கத்தா வசம் திரும்பியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் எம்எஸ் தோனி, வருண் சக்கரவர்த்தி ஓவரில் வெறும் 1 ரன்னில் போல்டானார். ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில், 3ல் வருண் சக்கரவர்த்தி ஓவரில் தோனி அவுட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தோனி அவுட்டான பிறகு, கொல்கத்தா முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அப்போது களத்தில் இருந்தது ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் தான். 19வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அப்போது சென்னை அணியின் வெற்றிக்கு தேவை 12 பந்துகளில் 26 ரன்கள். பிரசித் வீசிய முதல் இரு பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட, மூன்றாவது பந்தில் backward square-ல் ஜடேஜா சிக்ஸரை பறக்கவிட்டார். அதற்கு அடுத்த பந்தில், ஸ்ட்ரெய்ட்டில் ஒரு மெகா சிக்ஸரை பறக்கவிட்டார். கடைசி இரு பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை அடிக்க அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், சுனில் நரைன் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் கடைசி பந்தில் தீபக் சாஹர் சிங்கிள் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தார். இதனால் ரசிகர்களின் உச்சக்கட்ட பிரஷரை எகிற வைத்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் வெற்றிப் பெற்று, 10 போட்டிகளில் 8வது வெற்றியை பதிவு செய்து, 16 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது.
சிஎஸ்கே அணியின் மைனஸ்
இந்த போட்டியோடு சேர்த்து, ஐபிஎல் தொடரின் இந்த இரண்டாவது லெக்கில் சென்னையின் ஹாட்ரிக் வெற்றியாக இது அமைந்தது. எல்லாம் சரி தான். ஆனால், அணியின் மிகப்பெரிய ப்ளஸ் மற்றும் மற்றும் மைனஸாக இருப்பது மகேந்திர சிங் தோனி மட்டும் தான். ஆம்! ஒரு கேப்டனாக அணியின் மிகப்பெரிய தூணாக இருக்கும் தோனி, ஒரு பேட்ஸ்மேனாக....? பெரும் ஏமாற்றத்தை மீண்டும் மீண்டும் கொடுத்து வருகிறார். மும்பை, பெங்களூரு, கொல்கத்தா என்று 3 அணிகளுக்கு எதிராகவும் அவரால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு சிக்ஸர் அடிக்கக் கூட அவர் முயற்சிக்கவில்லை. எல்லாவற்றையும் விட, நேற்று வருண் சக்கரவர்த்திக்கு எதிரான அவுட்டான (போல்டான) விதம், உண்மையில் சென்னை அணிக்கும் சரி, அவரது ரசிகர்களுக்கும் சரி பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கும்.
உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்
மீண்டும் மீண்டும் வருண் ஓவரில் அவர் தனது விக்கெட்டை இழந்து வருகிறார். ஒருகாலத்தில் உலகின் அபாயகரமான வீரராக விளங்கிய தோனியை, இன்று ஒரு சாதாரண பவுலர் கூட எளிதில் அவுட்டாக்கிவிடும் சூழலே நிலவுகிறது. பயிற்சிப் போட்டிகளின் போது, 'தோனி சிக்ஸர்களை பறக்கவிட்டார்.. தோனி மிரட்டிவிட்டார்.. தல ஈஸ் பேக்' என்று ஹைப் கொடுக்கப்படுகிறதே தவிர, போட்டியில் அப்படி எந்தவொரு காட்சியையும் ரசிகர்களால் லைவில் காணமுடியவில்லை. 'கோயில்' படத்தில் வரும் வடிவேலு காமெடி காட்சியைப் போல.. "அண்ணன் அடித்தால் அடி.. இடித்தால் இடி.. மிதித்தால் மிதி" என்று சவுண்டு மட்டும் வருகிறதே தவிர, ரிசல்ட் ஜீரோ தான்.
தோனி ஃபார்ம் அவசியம்
இந்தளவுக்கு அவரது பேட்டிங் குறித்த ஏமாற்றத்துக்கு காரணம், பிளே ஆஃப் போட்டிகளில் அவருடைய ஃபார்ம் அவசியம் என்ற பதட்டத்தினால் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃபி நுழைவது உறுதி. ஆனால், அங்கு வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்காது. ஸோ, தோனி அதற்குள் ஃபார்முக்கு திரும்ப வேண்டியது அவசியம். ஏனெனில், தல ஜொலித்தால் தான் கோப்பை வசமாகும். அதற்கு அவர் ஒரு கேப்டனாக ஜெயித்தால் மட்டும் போதாது.. ஒரு பேட்ஸ்மேனாகவும் ஜெயிக்க வேண்டும்" என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.