டுபிளெசிஸ் அவுட்
முதலில் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டுபிளெசிசும், வாட்சனும் களம் இறங்கினர். 2வது ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர் டுபிளெசிஸ் சாஹர் பந்தில் வெளியேறினார். அதன் பின்னர் ரெய்னா 5 பந்துகளில் ஜெயந்த் ஜாதவ் பந்தில் அவுட்டானார்.
ரன் குவிப்பதில் நெருக்கடி
ஏற்கனவே தடுமாறி வந்த வாட்சனும் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 6 ஓவர்களுக்குள் சென்னை அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரன் ரேட்டும் எதிர்பார்த்த அளவு இல்லை. 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முரளி விஜயும், அம்பத்தி ராயுடுவும் நெருக்கடி நிலையை உணர்ந்து ஆடினர்.
வந்தார் தோனி
இருப்பினும் ரன்ரேட்டில் தொய்வு இருந்தது. 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த முரளி விஜய் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ரசிகர்களின் பெருத்த ஆரவாரங்களுக்கு இடையே களத்துக்கு வந்தார் தோனி. தொடக்கத்தில் அவரும் தடுமாறினார்.
நோபால் தந்த மகிழ்ச்சி
அம்பத்தி ராயுடுவும், தோனியும் மெதுவாக ரன்களை சேர்க்க தொடங்கினர். 19வது ஓவரில் தோனி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். 20வது ஓவரின் முதல் பந்தில் தோனி அடித்த பந்து கேட்சாக... அதிர்ஷ்டவசமாக அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. அவுட்டில் இருந்து தோனி தப்பிக்க, மைதானத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
131 ரன்கள் சேர்ப்பு
சிறப்பாக ஆடிய ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களே எடுத்தது. பெரிய ஸ்கோர் வரும் என்று எதிர்பார்த்த சென்னை ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர் என்று சொல்லலாம்.