7 முறை பைனல்
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியின் பயணம் குறித்த முக்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்... கடந்த காலங்களில் 7 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி தகுதிபெற்று, 3 முறை சாம்பியனாகி இருக்கிறது.
மும்பையுடன் சந்திப்பு
அதிலும் ஒரு குறிப்பிடத்தக்க ஒரு புள்ளி விவரம் இருக்கிறது. இந்த 7 முறை இறுதிப் போட்டிகளின் போது, 3 முறை மும்பையை சந்தித்துக்கிறது. நாளை 4வது முறையாக மும்பையை தல தோனி அண்ட் கோ நேருக்கு நேர் மீண்டும் சந்திக்க இருக்கிறது. அது தான் ரசிர்களை ஏக உற்சாகத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.
இறுதிப்போட்டி விவரங்கள்
கடந்த காலங்களில் சென்னை அணியின் இறுதிப்போட்டி விவரங்கள்:2008ம் ஆண்டு: முதல் ஐபிஎல் போட்டி அந்த ஆண்டில் தான் நடைபெற்றது. அந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்சை சந்தித்தது. ஆனால் தோற்றுப்போனது. பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் மகுடம் சூடியது.
முதல் முறை சாம்பியன்
2010-ஆம் ஆண்டு: நடப்பு தொடர் போன்றே, மும்பை இந்தியன்சும், சென்னையும் களம் கண்டன. அந்த ஆண்டின் தொடரில், 4 அணிகள் 14 என்ற சமமான புள்ளிகள் பெற்றதால் சென்னையும், பெங்களூரும் அரையிறுதியில் கால் பதித்தன. அதன் பின்னர் இறுதிக்கு சென்ற சென்னை அணி, மும்பை இந்தியன்சை வீழ்த்தி முதன் முறையாக ஐபிஎல் சாம்பியனானது.
மீண்டும் சாம்பியன்
2011-ம் ஆண்டு: இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. 58 ரன் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. அந்த போட்டியில் முரளி விஜய் அடித்த 95 ரன்கள்(52 பந்துகளில்) யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அவரின் அந்த அதிரடி ஆட்டத்தால் தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை சென்னை தக்க வைத்தது.
சென்னை வீழ்ந்தது
2012ம் ஆண்டு:இந்த ஆண்டில் இறுதிப்போட்டி நடைபெற்றது சென்னை சேப்பாக்கத்தில். சொல்லவே வேண்டாம்... உள்ளூர் ரசிகர்களின் கரவொலியில் சென்னை அணி விளையாடினாலும், கொல்கத்தா அணியானது, சென்னையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2 முறை பைனலில் தோல்வி
2013ம் ஆண்டு: இந்த முறையும் மீண்டும் மும்பை அணியுடன் இறுதிப்போட்டி. 2010ம் ஆண்டு கிடைத்த தோல்விக்கு பழி தீர்த்த மும்பை அணி கோப்பையை தட்டிச் சென்றது. இந்த போட்டியின் மூலம் தொடர்ந்து 2 முறை பைனலில் தோற்ற அணி சென்னை என்ற பெயர் கிடைத்தது.
மும்பையிடம் அடி வாங்கிய சென்னை
2015-ம் ஆண்டு: இப்பவும் இறுதிப்போட்டியில் மும்பையை சந்தித்தது சென்னை. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த போட்டி.. சென்னையின் மறக்க முடியாத போட்டி. மும்பை நிர்ணயித்த 203 என்ற கடின இலக்கை எட்ட முடியாமல் 2வது முறையாக மும்பையிடம் தோற்று கோப்பையை இழந்தது சென்னை.
8வது முறையாக தகுதி
2016, 2017 ஆகிய ஆண்டுகள் சென்னை அணியின் கஷ்டகால ஆண்டுகள் என்று சொல்லலாம். அதற்கு காரணம் சூதாட்ட விவகாரம். 2 ஆண்டுகள் விளையாட தடை. ஐபிஎல் தொடரின் கரும்புள்ளி என்று அதனை வர்ணிக்கலாம். அதன் பின்னர், 2018ம் ஆண்டு ஹைதராபாத் அணியுடன் களம் கண்டு இறுதியில் கோப்பையை வென்று தமது திறமையை நிரூபித்தது சென்னை அணி. தற்போது 8வது முறையாக இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது தோனி அண்ட் கோ.