50% ரசிகர்களுக்கு அனுமதி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், அதில் தற்போது 50 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்எஸ் ராமசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் கடந்த ஒரு ஆண்டாக லைவ் போட்டிகளை மைதானத்தில் கண்டு களிக்க முடியாத ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ராமசாமி அறிவிப்பு
முன்னதாக இதுகுறித்து ராமசாமி பிசிசிஐயிடம் பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ராமசாமி ஆலோசனை மேற்கொண்டதாகவும், தற்போது 50 சதவிகித ரசிகர்களை அனுமதிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அனுமதியை பிசிசிஐயிடம் வாங்குவது மட்டுமே பாக்கி என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் பங்கேற்க அழைப்பு
முன்னதாக அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் அடுத்து நடைபெறவுள்ள 3வது மற்றும் 4வது போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோதேராவில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச போட்டியான இதில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஓராண்டிற்கு பிறகு ரசிகர்கள் அனுமதி
சென்னையின் இரண்டாவது போட்டி வரும் 13ம் தேதி துவங்கி 17ம் தேதிவரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் காரணமாக மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது இந்த போட்டியின்மூலம் முதல் முறையாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.