பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பிருந்து கன மழை கொட்ட ஆரம்பித்தது.
விடாமல் மழை கொட்டியதால் டாஸ் கூட போடப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக்கில் நாளை பெர்த் ஸ்கார்ச்சர்சை எதிர்கொள்கிறது. பெங்களூரில் நேற்று முன்தினம் முதலே தினமும் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்கிறது. எனவே அடுத்த போட்டியின்போதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆனால் போட்டி நடந்து அதில் கண்டிப்பாக சென்னை வெற்றி பெற்றால்தான் அரைஇறுதி வாய்ப்பை பெற முடியும்.
ஏனெனில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள கொல்கத்தா அணி ஆடிய மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்று, ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. சென்னை 3 ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா கண்டு 6 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
பெர்த் அணி 2 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் நான்கு புள்ளிகளை பெற்றுள்ளது. லாகூர் லையன்ஸ் 2 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி, ஒரு டிரா கண்டுள்ளது. டால்பின்ஸ் தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே பெர்த் அணிதான் சென்னைக்கு சவாலாக இருக்கப்போகிறது.