இறுதிப் போட்டி
இதன்பிறகு, கடந்த ஆக.11 அன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிப் பெற்று கோவையை வெளியேற்றியது. தொடர்ந்து, கடந்த (ஆக.13) அன்று மற்றொரு வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் அணியும், தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. இதில், திண்டுக்கல் அணி வெறும் 103 ரன்கள் மட்டும் எடுக்க, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் . இந்நிலையில், நேற்று (ஆக.15) சுதந்திர தினத்தன்று திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
சிறப்பான தொடக்கம்
லீக் போட்டியிலும் சரி.. முதலாவது தகுதிச் சுற்றிப் போட்டியிலும் சரி.. திருச்சி வாரியர்ஸிடம் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஃபைனலில் திருப்பிக் கொடுக்க காத்திருந்தது. அதேசமயம், முதன் முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் திருச்சி களமிறங்கியது. இதனால், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணியில், ஓப்பனிங் வீரர்கள் கௌசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த காந்தி 26 ரன்களுக்கு அவுட்டானார்.
183 ரன்கள் குவிப்பு
இதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ராதாகிருஷ்ணன் 3, சசிதேவ் 12 ரன்கள், சதீஷ் 11, ஹரிஷ் குமார் 13 என அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஆனால், தனி ஆளாக மாஸ் காட்டிய ஜெகதீசன் 58 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். இதில் 2 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இதனால், 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 183 ரன்களை குவித்தது. ஜெகதீசன் எனும் ஒற்றை வீரரால் குவிக்கப்பட்ட ஸ்கோர் இது.
போராட்டம் தோல்வி
இதன் பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில் தொடக்க வீரர்கள் சந்தோஷ் சிவ் மற்றும் அமித் சாத்விக் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். 12 பந்துகளை சந்தித்த சந்தோஷ் ஷிவ் 16 ரன்களையும், 16 பந்துகளை சந்தித்த அமித் 36 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் வந்த வீரர்களில் நிதிஷ் ராஜகோபால் 26 ரன்களையும், அந்தோனி தாஸ் 13 ரன்கள் என பெவிலியன் திரும்ப, அந்த அணி 102 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இதன் பின் வந்த சரவண குமார் சென்னை அணிக்கு தலைவலியை கொடுத்தார். சிஸ்கர், பவுண்டரி என விளாசிய அவர், 25 பந்துகளில் 45 ரன்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால், அவரது அதிரடி வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு திருச்சி அணியால் 175 ரன்களே எடுக்க முடிந்தது. சேப்பாக் அணியில் இருந்து மொத்தம் 7 வீரர்கள் பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
50 லட்சம் பரிசு
இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, லீக் மற்றும் முதலாவது தகுதி சுற்றில் திருச்சியிடம் அடைந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து இறுதிப் போட்டியில் பழிதீர்த்துக் கொண்டது. சேப்பாக் அணி டிஎன்பிஎல் கோப்பையை வெல்வது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பிடித்த திருச்சி அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ. உதயநிதி
வெற்றிப் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு, அதுவும் தனது தாத்தாவும் மறைந்த முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு 91,776 வாக்குகள் பெற்று உதயநிதி ஸ்டாலின் வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. வாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு அவர் கோப்பையை வழங்கினார்.