கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று இரவு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து சில மணி நேரங்களில் சேத்தன் சௌஹானுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர்
சேத்தன் சௌஹான் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் பாஜக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சரான அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய அணியில்..
சேத்தன் சௌஹான் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளார். சுனில் கவாஸ்கருடன் இணைந்து துவக்க வீரராக ஆடியவர். டெஸ்ட் போட்டிகளில் 2084 ரன்கள் குவித்துள்ளார் அதன் சராசரி 31.57 ஆகும். ஓய்வுக்குப் பின் டெல்லி மாநில கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்திலும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நோய் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை.
கிரிக்கெட் வீரர்கள்
பாகிஸ்தான் அணியின் ஷாஹித் அப்ரிடி, ஜபர் சர்பராஸ், ஸ்காட்லாந்து அணியின் மஜீத் ஹக், வங்கதேச அணியின் நபீஸ் இக்பால் உள்ளிட்ட முன்னாள் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அந்த வரிசையில் இந்திய அணி முன்னாள் வீரர் சேத்தன் சௌஹானுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மற்றொரு கிரிக்கெட் அரசியல்வாதி
வங்கதேச அணி முன்னாள் கேப்டன் மஷ்ராபே மொர்டாசாவுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரும் வங்கதேச ஆளுங்கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். மக்களவை உறுப்பினராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவுகள்
இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் கிரிக்கெட் வீரர் சேத்தன் சௌஹான் தான். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, பலரும் அவர் விரைவில் மீண்டு வர வேண்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.