டெஸ்ட் மன்னன் புஜாரா
கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார் புஜாரா. தன் முதல் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அப்போது முதல் டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
ஐபிஎல்-இல் புஜாரா
டெஸ்ட் பேட்டிங்கில் 49.48 பேட்டிங் சராசரி வைத்துள்ள புஜாராவை டி20 வீரராக பார்க்க எந்த ஐபிஎல் அணியும் தயாராக இல்லை. அதன் காரணமாக அவரை எந்த ஐபிஎல் அணியும் அவரை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து வருகிறது.
ஏலத்தில் ஏமாற்றம்
ஆனால், மனம் தளராமல் தன் பெயரை ஐபிஎல் ஏலத்திற்கு அனுப்புவார் புஜாரா. ஆனால், அனைத்து ஐபிஎல் அணிகளும் அவர் பெயர் வரும் போது பெருத்த மவுனம் காப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. ஐபிஎல் தொடரில் இடம் இல்லை என்றால், புஜாரா அடுத்து செல்லும் இடம் இங்கிலாந்து கவுன்டி தொடர் தான்.
கை கொடுக்கும் கவுன்டி
ஆம், ஐபிஎல் நடக்கும் அதே கால கட்டத்தில் தான் இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் டெஸ்ட் போட்டித் தொடரான கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும். இந்தியாவின் ரஞ்சி ட்ராபி போன்ற இந்த தொடரில் ஒரீரு வெளிநாட்டு வீரர்களை ஆட வைக்க கவுன்டி அணிகளுக்கு அனுமதி உண்டு.
மூன்று அணிகள்
கடந்த ஆண்டுகளில் மூன்று கவுன்டி அணிகளில் இடம் பெற்று ஆடி உள்ளார் புஜாரா. டெர்பிஷயர், யார்க்ஷயர், நாட்டிங்ஹம்ஷயர் ஆகிய மூன்று அணிகளில் இடம் பெற்று இங்கிலாந்து மண்ணில் தன் பேட்டிங் திறனை பட்டை தீட்டிக் கொண்டுள்ளார் புஜாரா.
குளுசெஸ்டர்ஷயர் அணி
இந்த நிலையில், 2020 கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் குளுசெஸ்டர்ஷயர் அணியில் ஆட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார் புஜாரா. அந்த அணியில் ஆடும் இரண்டாவது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது. புஜாராவின் அனுபவம் தங்களுக்கு உதவும் என அந்த அணியின் பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜவகல் ஸ்ரீநாத்
அந்த அணியில் ஆடிய முதல் இந்தியர் ஜவகல் ஸ்ரீநாத். 1995இல் அவர் அந்த அணிக்காக ஆடி இருக்கிறார். அப்போது ஒரு சீசனில் 87 விக்கெட்கள் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். அந்த அனுபவம் தன் கிரிக்கெட் வாழ்வில் பெரிய அளவில் உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல்-இன் போது கவுன்டி போட்டிகள்
ஐபிஎல் தொடர் நடைபெறும் ஏப்ரல் - மே காலகட்டத்தில் தான் பெரும்பாலான கவுன்டி தொடர் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். மற்ற இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடும் போது, புஜாரா மட்டும் கவுன்டி தொடரில் ஆட இருக்கிறார்.
ஆறு போட்டிகளில் ஆடுவார்
குளுசெஸ்டர்ஷயர் அணியின் முதல் ஆறு லீக் போட்டிகளில் புஜாரா பங்கேற்க உள்ளார். இந்த ஆறு போட்டிகள் சுமார் இரண்டரை மாத காலம் நடைபெறும். இந்த போட்டிகள் மூலம் புஜாரா இங்கிலாந்து ஆடுகளங்களை பழகிக் கொள்ள அரிய வாய்ப்பு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் நிலையும் இதே தான்
இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வரும் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இடம் பெற்று வருகிறார். ஆனால், ஐபிஎல் தொடர் இல்லாத போது அவரும் கவுன்டி போட்டிகளில் ஆடி தன்னை பட்டை தீட்டி வருவது குறிப்பிடத்தக்கது.