கரீபியன் பிரீமியர் லீக் தொடர்
இந்தியாவின் ஐபிஎல் போலவே வெஸ்ட் இண்டீஸ்-இல் கரீபியன் பிரீமியர் லீக் என்ற டி20 தொடர் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ஆடுவார்கள் என்பதால் உலக அளவில் அந்த தொடருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
கேப்டனாக இருந்த கெயில்
கிறிஸ் கெயில் அந்த தொடரில் தவறாமல் ஆடி வருகிறார். அவர் ஜமைக்கா தல்லாவாஸ் என்ற அணியின் கேப்டனாக இருந்து 2013 மற்றும் 2016இல் அணியை வெற்றி பெற வைத்துள்ளார். எனினும், இடையே அந்த அணியில் இருந்து வெளியேறினார்.
அணி மாற்றம்
செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியில் ஆடினார். பின் மீண்டும் கடந்த ஆண்டு ஜமைக்கா தல்லாவாஸ் அணியில் இணைந்தார். அதே அணியில் மற்றொரு முன்னணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ராம் நரேஷ் சர்வான் இடம் பெற்று இருந்தார்.
மோசமான ஆட்டம்
கடந்த ஆண்டு நடந்த தொடரில் கிறிஸ் கெயில் 10 இன்னிங்க்ஸில் 243 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரே போட்டியில் 116 ரன்கள் எடுத்தது போக, மீதமுள்ள 9 இன்னிங்க்ஸ்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால், அவரை அணியை விட்டு நீக்கினர்.
ராம் நரேஷ் சர்வான் காரணம்?
ஆனால், தன்னை அணியை விட்டு நீக்கியதற்கு ராம் நரேஷ் சர்வான் தான் காரணம் என எண்ணிய கிறிஸ் கெயில், தன் யூட்யூப் சேனலில் ராம் நரேஷ் சர்வானை கடுமையாக தாக்கி வீடியோக்களை பதிவிட்டார். அதில் மிக மோசமாக தாக்கிப் பேசி கிரிக்கெட் உலகை அதிர்ச்சி அடைய வைத்திருந்தார்.
அவர் ஒரு பாம்பு
சர்வான், கொரோனா வைரஸை விட மோசமானவர், அவர் ஒரு பாம்பு, முதுகில் குத்துபவர் என்றெல்லாம் கடுமையாக பேசி இருந்தார். கிறிஸ் கெயிலின் அந்த பேச்சுக்கு அவர் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
நோக்கம் இதுதான்
ஆனால், கிறிஸ் கெயில் தற்போது விளக்கம் அளித்து அதில் இருந்து தப்பி உள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில் தான் ஜமைக்கா ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்துடன் தான் அந்த வீடியோக்களை பதிவிட்டேன் எனவும், என் கடைசி கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சொந்த மண்ணில் ஆட வேண்டும் என நினைத்தேன் எனவும் கூறி உள்ளார்.
வருத்தம் தெரிவிக்கவில்லை
அதே சமயம், அந்த வீடியோவில் உள்ள வார்த்தைகள் தன் இதயத்தில் இருந்து வந்ததாகவும், என் நோக்கம் டி20 தொடரை பாதிப்படைய செய்ய வேண்டும் என்பதல்ல எனவும் கூறி உள்ளார். ஒரு இடத்தில் கூட தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை கிறிஸ் கெயில்.
தண்டனை இல்லை
கிறிஸ் கெயிலின் இந்த விளக்கத்தை ஏற்று இந்த சர்ச்சையை அப்படியே இழுத்து மூடி விட்டது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம். கொரோனா வைரஸ் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மோசமாக இருக்கும் நிலையில், நிர்வாகம் இந்த சிக்கலை பெரிது படுத்த விரும்பாமல் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.