டாக்கா: வங்கதேச பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணியில் விளையாடிய கிறிஸ் கெயில் 69 பந்துகளில் 18 சிக்சர்களை பறக்கவிட்டு துவம்சம் செய்தார். 20 ஓவர்கள் போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கெயில் நிகழ்த்தியுள்ளார்.
வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) இறுதிப் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ், ரங்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டாக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
ரங்பூர் அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன், கெயில் களமிறங்கினர். 2-வது ஓவரில் ஜான்சன் அவுட்டாக மெக்கல்லம்- கெயில் இணைந்து ஆடினர்.
கெயில் தொடக்கம் முதலே அதகள அதிரடிதான். 69 பந்துகளை எதிர்கொண்ட கெயில் 18 சிக்சர்களை விளாசினார். கெயில் 146, மெக்கல்லம் 51 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ரங்பூர் அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டாக்கா டைனமைட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால் ரங்பூர் ரைடர்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இப்போட்டியின் மூலம் 20 ஓவர்கள் போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை கெயில் நிகழ்த்தியுள்ளார். மேலும் 20 ஓவர்கள் போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த முதல் வீரர்; 20 சதங்களை அடித்த முதல் வீரர் ஆகிய பெருமைகளையும் கெயில் பெற்றுள்ளார்.
அத்துடன் வங்காளதேச பிரீமியர் லீக் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் கெயில் பெற்றுள்ளார்.