2 தினங்களில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடருக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஃபயர் தொற்றியுள்ளது. இந்த தொடர் கடந்த சீசனை போல அல்லாமல் இந்தியாவிலேயே 6 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அணி வீரர்களும் நெட் பயிற்சிகள் மற்றும் பயிற்சி போட்டிகளை மேற்கொண்டுள்ளனர்.
கேகேஆர் தீவிரம்
கடந்த சீசனில் சிறப்பான போட்டிகளை தராத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாட முனைப்பு காட்டி வருகிறது. அதன் வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து கேகேஆர் அணிக்காக இந்த சீசனில் தேர்வாகியுள்ள ஹர்பஜன் சிங் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தினேஷ் கார்த்திக் பாராட்டு
இந்நிலையில் அவரது இணைப்பு கேகேஆர் அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேகேஆரின் வலைதளத்தில் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், நீண்ட காலங்களாக அவர் கிரிக்கெட்டில் இருந்தாலும் கடந்த ஒரு வாரத்தில் பயற்சி போட்டிகளில் அவரது ஆர்வம் மற்றும் தீவிரம் மிகவும் சிறப்பானது என்றும் கூறியுள்ளார்.
தீவிர பயிற்சிகள்
7 மணிக்கு பயிற்சி போட்டிகள் வைத்தால் 4 மணிக்கே வந்து பயிற்சிகளை மேற்கொள்கிறார் என்றும் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னதாகவே பேட்டிங் செய்கிறார், பீல்டிங்கில் 20 ஓவர்களில் ஈடுபடுகிறார் மற்றும் பௌலிங் செய்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் இயான் மார்கன் ஆகியோரை அவுட் ஆக்கியுள்ளதாகவும் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
இயான் மார்கன் பாராட்டு
முன்னதாக அணியின் கேப்டன் இயான் மார்கனும் ஹர்பஜன் சிங் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது இணைப்பு அணியை பலப்படுத்தும் என்றும் இந்த தொடரில் சிறப்பான போட்டிகளை தர வேண்டுமென்றால் ஸ்பின்னர்கள் சிறப்பாக பௌலிங் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.