நாளை துவக்கம்
ஐபிஎல் போட்டிகள் நாளை முதல் துவங்கி வரும் நவம்பர் 10ம் தேதி வரையில் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் 53 நாட்கள் நடைபெறவுள்ளன. நாளை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கிடையில் முதல் போட்டி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதற்கென இரு அணிகளும் தயார் நிலையில் உள்ளன.
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
கடந்த சீசனில் கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த முறையும் கோப்பையை கைப்பற்றுவது அந்த அணிக்கு கடினமானதாக இருக்காது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி வீரர் குவின்டன் டீ காக் இருவரும் தொடர் முழுவதும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பட்டையை கிளப்பினர்.
சிறப்பான துவக்க ஆட்டக்காரர்கள்
இதேபோல இந்த கூட்டணியே இந்த சீசனிலும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தான் துவக்க ஆட்டக்காரராக விளையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் ஆனால் அணி நிர்வாகம் வேறு முடிவெடுத்தால் தான் அதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
துவக்க கூட்டணி தொடரும்
ரோகித் சர்மா, குவின்டன் டீ காக், கிறிஸ் லின் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற துவக்க ஆட்டக்காரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர். மேலும் ஐபிஎல் போட்டிகளில் ரோகித் சர்மா 4வது இடத்தில் விளையாடிய அனுபவம் உள்ளது. இந்நிலையில், துவக்க ஆட்டக்காரராக அவர் தொடர உள்ளதாக தலைமை பயிற்சியாளர் மகிள ஜெயவர்த்தனேவும் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் சிறப்பாக உள்ள ரோகித் -குவின்டன் கூட்டணியை மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.