வெல்லி்டன்: 7வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் ஆடக் காத்திருக்கும் நியூசிலாந்தின் சென்சேஷனல் வீரர் கோரி ஆண்டர்சன், காயம் காரணமாக போட்டியில் ஆட முடியுமா, முடியாதா என்ற சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த டாக்டர்கள் குழு அவர் விளையாடலாம் என்று சான்றிதழ் கொடுத்தால்தான் அவரை விளையாட அனுமதிக்கப் போகிறதாம் வாரியம்.
மும்பை இந்தியன்ஸ் அணியால் பெரும் விலைக்கு வாங்கப்பட்டவர் கோரி. இதுதான் அவர் ஐபிஎல்லில் இணைவது முதல் முறையாகும். ஆனால் ஏப்ரல் 1ம் தேதி நடந்த உலகக் கோப்பை டுவென்டி 20போட்டியின்போது சுண்டு விரல் அடிபட்டு காயமடைந்தார் கோரி.
இதனால் அவர் விளையாட முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறுகையில், எங்களது மருத்துவக் குழு கோரியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடப் போவதற்கு முன்பு சான்றிதழ் தேவைப்படும். அது கிடைத்ததும் நாங்கள் அனுமதிப்போம் என்றார்.
எனவே இன்றைய போட்டியில் கோரி ஆடுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.