கோரி ஆண்டர்சன்
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன். 2014 புத்தாண்டு அன்று 36 பந்துகளில் சதம் அடித்து ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருந்தார். பின்னர் அந்த சாதனையை ஏபி டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து முறியடித்தார்.
நிலையான இடம் இல்லை
கோரி ஆண்டர்சன் அந்த சாதனைக்கு பின்னரும் அணியில் நிலையான இடத்தை பெறவில்லை. 13 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகள், 31 டி20 போட்டிகளில் மட்டுமே அவர் ஆடி உள்ளார். மொத்தமாக 93 சர்வதேச போட்டிகளில் அவர் 2,277 ரன்கள் குவித்துள்ளார்.
ஒப்பந்தம்
2 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார். 90 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். அவர் சில ஆண்டுகளாக நிலையான பார்மில் இல்லை. எனினும், டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது அவருக்கு அமெரிக்காவில் தொடங்க உள்ள மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
வெளியேற முடிவு
அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்கும் பொருட்டு இந்த லீக் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதில் கோரி ஆண்டர்சன் மூன்றாண்டு ஒப்பந்தம் பெற்றுள்ளார். அவர் இதற்காக நியூசிலாந்து நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்ததன் பின்னணியில் அவரது வருங்கால மனைவி இருக்கிறார்.
வருங்கால மனைவி
அவரது வருங்கால மனைவி மேரி மார்கரெட் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அமெரிக்காவில் லீக் தொடரில் ஆட உள்ள நிலையில் அவருக்காக நியூசிலாந்து நாட்டை விட்டு வெளியேற ஆண்டர்சன் முடிவு செய்துள்ளார்.
ஓய்வு
இதை அடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வை அறிவித்து அதிர வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு நியூசிலாந்து தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.