பயோ பபுள்
அதாவது, உலகின் மெகா வாரியத்தின் பாதுகாப்பையே கொரோனா லெஃப்ட்டில் டீல் செய்திருக்கிறது. தொடர் முழுவதும் வீரர்கள், நடுவர்கள், ஒளிபரப்பு குழு, அணியின் நிர்வாக ஊழியர்கள், மைதான ஊழியர்கள் என அனைவரும் இந்த பயோ பபுளில் தான் இருந்தார்கள். பயோ பபுளில் பட்டியலிடப்பட்டுள்ள மைதானம், ஹோட்டல், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட இடங்களுக்கும் மட்டுமே இவர்கள் செல்ல அனுமதி உண்டு. மற்ற எந்த இடத்திற்கும் மறந்தும் இவர்கள் செல்லக் கூடாது. அதேபோல பயோ பபுளுக்கு வெளியே இருப்பவர்கள் யாரையும் இவர்கள் சந்திக்கக் கூடாது.
பெப்பே காட்டிய கொரோனா
அதேபோல பயோ பபுளில் இருப்பவர்களுக்குத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது உடல் வெப்பம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.. கடந்த ஐபிஎல் சீசனுன் இப்படி தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. இதே சிஸ்டமில் தான் இந்த முறையும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றன. ஆனால், இறுதியில், பெப்பே காட்டிய கொரோனா, 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' வீரர் வருண் சக்கரவர்த்தியை தொற்றிக் கொள்ள அதிர்ந்தது பிசிசிஐ.
அஞ்சிய வீரர்கள்
அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளுக்கும், பவுலிங் கோச் பாலாஜி, பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி, சன் ரைசர்ஸ் வீரர் சாஹா, மேலும் 3 கொல்கத்தா வீரர்கள் என்று அடுத்தடுத்து கொரோனா போட்டுத்தாக்க அரண்டு போன பிசிசிஐ, மறு தேதி குறிப்பிடாமல் தொடரை நிறுத்திவைத்து விட்டது. மற்ற வெளிநாட்டு வீரர்களை, அந்தந்த நாட்டின் அரசுகள் உடனடியாக அழைத்துக் கொண்டாலும், ஆஸ்திரேலியா மட்டும், தங்கள் நாட்டு குடிமகனாகவே இருந்தாலும், மே-15 வரை ஆஸ்திரேலியா திரும்ப அனுமதி கிடையாது என்று உத்தரவிட்டு அதிர வைத்தது.
உணர்த்திய கொரோனா
15.5 கோடி கொட்டி எடுக்கப்பட்ட பேட் கம்மின்ஸ், 14.25 கோடி மேக்ஸ்வெல், 12.5 கோடி வார்னர் என்று கோடிகளில் புரண்ட பல ஆஸ்திரேலிய வீரர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் கையறு நிலையில் நின்றனர். இவர்கள் தங்கள் நாட்டு குடிமகன் என்றாலும், கொரோனா எனும் கோரத்துக்கு அஞ்சி, இவர்களை உள்ளே விடவே முடியாது என்று மறுத்துவிட்டது ஆஸ்திரேலிய அரசு. அதன் பிறகு, ஆஸ்திரேலிய வீரர்களை மாலத்தீவு கொண்டுச் சென்று பிசிசிஐ தங்க வைத்தது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த கதை. இத்தனை கோடிகள் சம்பளம் பெற்றாலும், சொந்த நாட்டிற்கு கூட செல்ல விடாமல் தடுத்த கொரோனா, பணத்தை மீறிய வாழ்க்கை இருக்கிறது என்பதை நமக்கு பொட்டில் அடித்தால் போல் உணர்த்திவிட்டது.
மத்ததெல்லாம் அப்புறம்
செல்வம் எவ்வளவு இருந்தாலும், அதை அனுபவிக்க உயிர் இருக்க வேண்டும். அதை மிஞ்சி இவ்வுலகில் எதுவும் இல்லை என்பது, அத்தனை ஆஸ்திரேலிய வீரர்களும், அவர்களது குடும்பமும் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த தருணங்கள் நமக்கு உணர்த்தியது. இவ்வளவு கொடூரத்துக்கு மத்தியிலும், ஆக்சிஜன் சிலிண்டரை கருப்பு சந்தையில் விற்பது, ரெமிடிஸிவிர் மருந்துகளை அநியாய விலைக்கு விற்பது என்று இதிலும் காசு பார்க்கும் அவலத்தை என்னவென்று சொல்ல!