பள்ளியில் பணி
மும்பையில் ஒரு பள்ளியில் கால்பந்து பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார் பிரசாத் போசாலே. அவரது மாத சம்பளம் 25,000. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஐந்து மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் திறக்கவில்லை. மேலும், விளையாட்டுக்களுக்கும் கூட அனுமதி இல்லை.
பணி நீக்கம்
இந்த நிலையில், லாக்டவுனை காரணம் காட்டி அவரை வேலையை விட்டு நீக்கி விட்டது பள்ளி நிர்வாகம். துவக்கத்தில் என்ன செய்வது என புரியாமல் தடுமாறி இருக்கிறார். பின்னர் நண்பர்கள் சிலர் காய்கறி விற்கலாம் என யோசனை கூறி உள்ளனர்.
வீதியில் வியாபாரம்
இந்த சமயத்தில் எளிதான வியாபாரம் அதுதான். முதலில் யோசித்துள்ளார் பிரசாத். பின்னர் குடும்பத்தை கருத்தில் கொண்டு வியாபாரத்தை துவக்கி இருக்கிறார். முதலில் வீதியில் வைத்து காய்கறி வியாபாரம் செய்துள்ளார். அப்போது காவல்துறை கெடுபிடி இருந்துள்ளது.
லாபம் எவ்வளவு?
அதன் பின் 6,000 வாடகையில் ஒரு கடையை பிடித்து அதில் வியாபாரத்தை தொடர்ந்து வருகிறார். நேரில் சென்று ஹோம் டெலிவரியும் செய்கிறாராம். ஒரு நாளைக்கு 500 முதல் 600 வரை லாபம் கிடைப்பதாக சொல்கிறார். சமூக வலைதளங்களிலும் தன் எண்ணை கொடுத்து ஆர்டர்களை பெற்று வருகிறார்.
வீட்டில் 4 பேர்
கால்பந்து பயிற்சியாளராக இருந்து விட்டு, காய்கறி மூட்டையை சுமந்து செல்ல முதலில் தயக்கமாக இருந்தாலும், வீட்டில் பெற்றோர் உட்பட நான்கு பேர் இருப்பதை எண்ணி இதை செய்வதாகவும், இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு சொந்த வியாபாரம் செய்கிறோம் என்ற திருப்தியுடன் இருப்பதாகவும் கூறி இருக்கிறார் பிரசாத்.