கொரோனா வைரஸ் கட்டுப்பாடு
கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று நோய் காரணமாக உலகம் முடங்கி உள்ளது. மக்கள் கூட்டமாக கூடக் கூடாது என்பதில் துவங்கி அந்த நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. எச்சில் மூலமாக பரவும் என்பதால் பொதுவெளியில் எச்சில் துப்பக் கூடாது என்பது அதில் ஒன்று.
பெரும் சிக்கல்
இந்த விஷயம் தான் கிரிக்கெட் விளையாட்டை கடுமையாக பாதித்துள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் பந்தை எச்சில் தொட்டு துடைத்து பந்தின் தன்மையை, வடிவத்தை மாற்றுவார்கள். அதன் மூலம் பந்து ஸ்விங் ஆகும். அதற்கு பெரும் சிக்கலை உண்டாக்கி உள்ளது கொரோனா வைரஸ்.
முன்னெச்சரிக்கை வேண்டும்
கொரோனா வைரஸ்-ஐ முற்றிலும் ஒழிப்பது சாத்தியம் இல்லை என கூறப்படும் நிலையில், அதன் தாக்கம் குறைந்த பின் கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுக்களும் முன்னெச்சரிக்கைகளுடன் தொடங்கக் கூடும்.
அபாயம்
அப்போது கிரிக்கெட் வீரர்கள் இனி எச்சில் பயன்படுத்தி பந்தை துடைத்தால் அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்படும். அதே சமயம் பந்தை ஸ்விங் செய்யாமல் ஒருநாள் போட்டிகளில் சமாளிக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டியில் அது மிகவும் கடினம்.
வேறு வழி உள்ளதா?
சரி, பந்தின் வடிவத்தை மாற்ற வேறு வழியே இல்லையா? உள்ளது. அப்படி வேறு சில பொருட்கள் பயன்படுத்தி பந்தை தேய்த்து அதன் வடிவத்தை மாற்றலாம். அப்படி ஒரு வேலையை செய்து தான் ஆஸ்திரேலிய வீரர்கள் 2018 ஆம் ஆண்டு சிக்கினர்.
உப்புத் தாள் வைத்து தேய்த்தார்
2018இல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வார்னர் திட்டத்தின் படி கேமரான் பான்கிராப்ட் பந்தை உப்புத் தாள் வைத்து தேய்க்க முயன்ற போது சிக்கினார். கிரிக்கெட் விதிப்படி பந்தின் வடிவத்தை வெளிப் பொருட்களை வைத்து செயற்கையாக மாற்ற முயன்றால் அது தவறு.
ஓராண்டு தடை பெற்று மீண்டனர்
அதன் காரணமாக ஐசிசி தண்டனையோடு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் தண்டனையையும் பெற்றனர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர். ஓராண்டு அவர்கள் தடை பெற்று, அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
ஐசிசி விவாதம்
இந்த நிலையில், கொரோன வைரஸ்-க்கு பின் கிரிக்கெட் தொடங்கும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் விதி மாற்றங்கள் பற்றி ஐசிசி விவாதித்தது. பந்தை ஸ்விங் செய்ய வைக்கும் வகையில் அம்பயர் முன்னிலையில் செயற்கையாக பந்ததின் வடிவத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கலாமா? என ஐசிசி யோசித்து வருகிறது.
விதிப்படி அனுமதி
அதாவது இதுவரை தவறாக இருந்த பந்து சேதத்தை, விதிப்படி அனுமதிக்க ஐசிசி யோசித்து வருகிறது. இது உண்மை என்றால் எந்த உப்புத் தாளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஓராண்டு கடும் பாதிப்புக்கு உள்ளானதோ, அதே உப்புத் தாளை வைத்து இனி அனைவரும் அம்பயர் முன் பந்தை தேய்த்து சேதம் செய்வார்கள்.
கேலிக் கூத்து
அப்படி நடந்தால் அது கிரிக்கெட் உலகில் இதுவரை நடந்த பல கேலிக் கூத்துக்களிலேயே உச்சகட்டமாக இருக்கும். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பற்றி அப்போது உலகமே பரிதாபப்படும் நிலை உருவாகும். ஆனால், இது சாத்தியம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.