ஐபிஎல் நிலை என்ன?
கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய 2020 ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னரும் நிலைமை மோசமாக சென்றதால் ஐபிஎல் தொடரை அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
லாக்டவுன் சிக்கல்
ஐபிஎல் தொடரை நடத்துவதில் பிசிசிஐ அமைப்புக்கு உள்ள முதல் சிக்கல் லாக்டவுன் தான். ஒரே மைதானத்தில், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்தினாலும், லாக்டவுன் விதிகள் அமலில் இருப்பதால் விதிப்படி போட்டியை நடத்த முடியாது.
கொரோனா பரவும் அபாயம்
ஒருவேளை சிறப்பு அனுமதி வாங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகளை நடத்தினாலும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சார்ந்த ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அபாயகரமானது.
வெளிநாட்டு வீரர்கள்
அடுத்து இந்திய அரசு விசா வழங்க மறுத்து வரும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை இந்தியா வரவழைப்பது மிக மிக கடினமான காரியம். விமான சேவைகள் வெகுவாக முடங்கி இருக்கும் இந்த சமயத்தில் அவர்களை இந்தியா அழைத்து வருவதோடு, அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைத்திருக்க வேண்டும். அதுவும் சிக்கல் தான்.
வாய்ப்பே இல்லை
இந்த சூழ்நிலையில், 2020 ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களுக்கு நடத்த வாய்ப்பே இல்லை. வருட இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அப்போது அனைத்து நாடுகளும் கிரிக்கெட் தொடர்களை நடத்தி நஷ்டத்தை ஈடு கட்ட முயற்சி செய்யும். எனவே, அப்போது ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பே இல்லை.
பெரும் நஷ்டம்
ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் அதனால் பிசிசிஐக்கு 4,000 கோடி நஷ்டம் ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் சமீபத்தில் கூறி இருந்தார். அது மட்டுமின்றி, பிசிசிஐ 2020 ஐபிஎல் தொடரை காப்பீடு செய்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதனால், இந்த நஷ்டத்தை ஈடு கட்ட முடியாமலும் போகக் கூடும்.
இரு நாடுகள் அழைப்பு
இதற்கிடையே இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் இருந்தால் எங்கள் நாட்டில் வந்து நடத்துங்கள் என இரண்டு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒன்று இலங்கை. மற்றொரு நாடு ஐக்கிய அரபு அமீரகம். இதில் ஐக்கிய அரபு நாட்டில் சில ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முடிவு எடுக்கவில்லை
பிசிசிஐ இது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் ஐபிஎல் நடத்தினாலும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக உள்ளது.
கை மீறிப் போன நிலை
பிசிசிஐ-யை பொறுத்தவரை 2020 ஐபிஎல் தொடர் நடத்துவது சாத்தியமே இல்லை, நிலைமை கை மீறி போய் விட்டது என்ற முடிவுக்கே வந்து விட்டதாகவே தெரிகிறது. எனினும், இப்போதே ரத்து முடிவை அறிவிக்காமல் அமைதியாக உள்ளது.