ஜூலை இறுதியில் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் 3 டெஸ்ட் போட்டிகள் தொடர் வரும் 8ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடருக்கு அடுத்ததாக ஜூலை மாத இறுதியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
பாக். அணி வீரர்களுக்கு கொரோனா
இந்நிலையில் இங்கிலாந்தில் அடுத்ததாக பாகிஸ்தான் அணியினர் ஜூலை மாத இறுதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் 3 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்று ஆடவுள்ளனர். இதற்கென வரும் மாத துவக்கத்தில் அவர்கள் இங்கிலாந்து சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த அணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஆஷ்லே கில்ஸ் வருத்தம்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராப், ஆல்-ரவுண்டர் சதாப் கான், ஹைதர் அலி உள்ளிட்ட 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கவலை தெரிவத்துள்ள இங்கிலாந்து ஆண்கள் அணியின் நிர்வாக இயக்குநர் ஆஷ்லே கில்ஸ், இங்கிலாந்து -பாகிஸ்தான் தொடர் கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
கண்டிப்பாக நடக்கும்
தொடர் துவங்குவதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும், அதனால் பாகிஸ்தான் அணியினர் விரைவில் இங்கிலாந்துக்கு வருவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். அடுத்தக்கட்டமாக மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.