மழையால் முதல் போட்டி ரத்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி கடந்த 12ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி ரத்தானது.
கொரோனா வைரஸ் பீதி
அடுத்தடுத்த போட்டிகள் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த இரண்டு போட்டிகளும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இரண்டு போட்டிகளையும் ரத்து செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர் பின்பு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பிடம் மாற்றம்
தொடர் ரத்தானதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பவுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அவர்களின் பயணத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவின் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள ரஜர்ஹட் ஹோட்டலில் வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காத்திருக்கும் வீரர்கள்
முன்னதாக ஈடன் கார்டன் மைதானத்தின் அருகில் உள்ள அலிப்போரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வீரர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விமானநிலையத்திற்கு அருகில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை காலை, கொல்கத்தாவில் இருந்து புறப்படும் வீரர்கள், துபாய் வழியாக தங்களது நாட்டிற்கு செல்வார்கள் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. ஆயினும், இந்த திட்டத்தில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை
இதனிடையே, தென்னாப்பிரிக்க வீரர்களை தீவிரமாக கண்காணிக்க மருத்துவக் குழுவினரும், அந்த ஹோட்டலில் உள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகளும், அவர்களது உதவிக்காக ஹோட்டலில் உள்ளனர். இந்நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து முதலமைச்சருக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் அவிஷேக் டால்மியா தெரிவித்துள்ளார்.