சிஎஸ்கே வீரர்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் சுரேஷ் ரெய்னா. ஆனால் டி20 போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி சார்பில் விளையாடிவரும் ரெய்னா சிறப்பான தருணங்களை வெளிப்படுத்தி வருகிறார்.
120 ரன்களை குவித்த ரெய்னா
இலங்கைக்கு எதிராக கடந்த 2005ல் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, ஸ்பின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பந்தில் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனார். இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து 2010ல் இவரது முதல் டெஸ்ட் போட்டி அதே இலங்கைக்கு எதிராக அமைந்தது. அதில் 120 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
யுவராஜ் சிங்கிற்கு பதில் ஆட்டம்
இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ராவின் ஆகாஷ்வாணி நிகழ்ச்சியில் பேசிய ரெய்னா, இலங்கைக்கு எதிரான அந்த போட்டிக்கு முந்தைய நாள் இரவு, யுவராஜ்சிங் தனக்கு தொலைபேசி மூலம் அழைத்ததாகவும், அப்போது, அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவருக்கு பதிலாக அந்த போட்டியில் தான் விளையாட வாய்ப்புள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த இரவு தனக்கு தூங்காமல் கழிந்ததாகவும் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
ரிலாக்சாக அவகாசம்
இந்தப் போட்டியில் இந்தியா டாசில் தோல்வியுற்று முதலில் பௌலிங் செய்ததாகவும், இதனால் தன்னுடைய பதற்றம் குறைந்து தான் ரிலாக்சாக 2 நாட்கள் அவகாசம் கிடைத்ததாகவும் தொடர்ந்து சதமடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ரெய்னா மேலும் கூறியுள்ளார். அந்த போட்டியில் 642 ரன்களை இலங்கை அடித்த நிலையில், இந்தியா 707 ரன்களை அடித்து ஆட்டத்தை நிறைவு செய்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். இதையடுத்து அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
அதிகமான ரிஸ்க் எடுக்க வேண்டும்
டி20 என்பது மிகவும் எளிதானது என்று மக்கள் கருதுவதாகவும் ஆனால் பந்தை காற்றில் சுழற்றியடிக்க மிகவும் ரிஸ்க் எடுத்து ஆடவேண்டும் என்றும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்-ஸ்பின்னர்கள் மற்றும் பவுன்சர்களை எதிர்கொள்ள தான் மிகவும் சிரமப்பட்டதாகவும் அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட தனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.