குழந்தைகள் பாதிப்பு
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு சொல்லில் அடங்காதது. அனைத்து துறைகளிலும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆதரவற்ற நிலையில் கொரோனாவால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிளசிஸ் பேட், ஜெர்சி ஏலம்
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் இணைந்து நிதித் திரட்டும் முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகிய வீரர்களின் அழைப்பை ஏற்று பாப் டூ பிளசிஸ் குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய ஐஎக்ஸ்யூ ரக புதிய பேட் மற்றும் 18ம் எண் கொண்ட பிங்க் நிற ஜெர்சி ஆகியவற்றை ஏலத்திற்காக கொடுத்துள்ளார்.
டூ பிளசிஸ் அறிவிப்பு
இவ்வாறு ஏலத்தில் விடப்படும் தன்னுடைய பொருட்களின் மூலம் வரும் தொகையை கொரோனா பாதிப்பிற்குள்ளான குழந்தைகளின் நலனுக்காக கொடுக்க பிளசிஸ் முன்வந்துள்ள நிலையில், 5 லட்சம் ரூபாய் வரையில், இவ்வாறு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் ஹில்சாங் ஆப்ரிக்கா பவுண்டேஷன் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உதவி
டூ பிளசிஸ் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவி செய்வது இது முதல் முறையல்ல. கொரோனாவால் சர்வதேச சமூகமும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னதாக தன்னுடைய மனைவி இமாரி விசருடன் இணைந்து தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டி தென்னாப்பிரிக்காகவின் 35,000 குழந்தைகளுக்கு உணவளிக்க அவர் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.