மூன்றரை மாத டூர்
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் நடைபெறவுள்ள இந்த டூருக்கான, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஜூன் மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
குடும்பத்துடன் அனுமதி
இதற்காக இந்திய அணி வீரர், இம்மாத இறுதியில், மும்பையில் தனிமைபப்டுத்தப்பட உள்ளார்கள். மூன்றரை மாத பெரிய டூர் என்பதால், குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இம்மாத இறுதியில், குடும்பத்துடன் மும்பையில் தனிமையில் வைக்கப்படுகிறார்கள். இந்தியாவில், 8 நாட்கள் ஐசோலேஷனில் இருந்துவிட்டு, இங்கிலாந்து செல்லும் வீரர்கள், அங்கு 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். மொத்தம் 18 நாட்கள். அதன் பிறகே, பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதிகரிக்கும் கொரோனா
இந்த நிலையில், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதிக்கு பிறகு, இப்போது மீண்டும் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று (மே.13) இங்கிலாந்தில் 2,657 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்.27 க்கு பிறகு, இந்த எண்ணிக்கை தான் அதிகம். அதுமட்டுமின்றி, 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிர்வாகம் கவலை
அதிகரிக்கும் இந்த எண்ணிக்கையால், இங்கிலாந்து அரசு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நேரத்தில், மீண்டும் அதிகரிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. அதேசமயம், பிசிசிஐ இந்த நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய அணி ஜூன் மாதம் தான் இங்கிலாந்து செல்கிறது என்றாலும், அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்று, இந்திய அணி நிர்வாகத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டு, அதை 'நடத்தித் தருகிறோம்' என்று சொன்ன இலங்கையிலும் கொரோனா பாதிப்பு எகிற, இப்போது இங்கிலாந்திலும் கொரோனா அதிகரிப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.