18ம் தேதி துவக்கம்
கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வரும் 18ம் தேதி துவங்கவுள்ளதையடுத்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. நடப்பு சாம்பியன் பார்படாஸ் ட்ரிடண்ட்ஸ், செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பாட்ரியாஸ், செயிண்ட் லூசியா சாக்ஸ் மற்றும் ஜமாய்க்கா தாலவாஸ் உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்கவுள்ளன. ட்ரினிடாட்டின் இரண்டு இடங்களில் மொத்தம் 33 போட்டிகள் நடைபெறவுள்ளன.
கொரோனா பரிசோதனை
இதையடுத்து அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் ட்ரினிடாட் மற்றும் டபாக்கோவிற்கு வரவழைக்கப்பட்டு அங்கு அவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 162 வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது.
தொடர் பரிசோதனைகள்
இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் சிபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்களில் யாருக்கேனும் கொரோனா உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர்கள் ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டு தனியான ஒரு இடத்தில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
விழிப்புடன் செயல்படுவோம்
ட்ரினிடாட் மற்றும் தபாகோவில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை முக்கியமாக கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக தொடரின் செயல் இயக்குநர் மைக்கேல் ஹால் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார். 162 வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது சிறப்பானது என்றாலும் தாங்கள் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.