கிரிக்கெட் முடக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் உலகம் மார்ச் முதல் சுமார் நான்கு மாதங்கள் வரை முடங்கி இருந்தது. இங்கிலாந்து முதல் அணியாக தங்கள் நாட்டில் கிரிக்கெட் தொடர்களை நடத்தத் துவங்கியது. அதைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் கிரிக்கெட் தொடர்களை நடத்த முயன்று வருகின்றன.
ஐபிஎல்
இந்தியாவைப் பொறுத்தவரை பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த முயற்சி எடுத்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் அந்த தொடருக்கு இந்தியாவில் இருந்தே செல்ல உள்ளனர். மற்ற வெளிநாட்டு வீரர்கள் அங்கே வந்து இணைய உள்ளனர்.
பின்னடைவு
இந்திய வீரர்கள் கடந்த ஐந்து மாதமாக முழுமையான கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடவில்லை. கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. நீண்ட காலம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முன் அவர்கள் பயிற்சி இல்லாமல் இருப்பது பின்னடைவாக பார்க்கபடுகிறது.
கரீபியன் பிரீமியர் லீக்
அதே சமயம், ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற உள்ள கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பயிற்சி இல்லாத வீரர்களை விட ஒரு படி முன்னிலையில் இருப்பார்கள். அவர்கள் சுமார் ஒரு மாத காலம் டி20 போட்டிகளில் ஆடிய பயிற்சியுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள்.
வீரர்கள் பட்டியல்
கீரான் பொல்லார்டு, டிவைன் பிராவோ, ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடி விட்டு ஐபிஎல்-இல் ஆட உள்ளனர். இது குறித்து முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பேசினார்.
நெஹ்ரா உறுதி
"சிபிஎல் தொடரில் ஆடும் வீரர் யாராக இருந்தாலும், அவர்கள் ஐபிஎல்-இலும் அதே போல ஆடுவார்கள் என உத்தரவாதம் அளிக்க முடியாது ஆனால், மற்ற வீரர்களை விட அவர்கள் சற்று முன்னிலையில் இருப்பார்கள்" என்று உறுதியாக கூறினார் ஆஷிஷ் நெஹ்ரா.
மாற்றம்
"அவர்கள் ஒரு மாதம் விளையாடி விட்டு ஐக்கிய அரபு அமீரகம் வந்தால் அது நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். அது கீரான் பொல்லார்டு, இம்ரான் தாஹிர் அல்லது ரஷித் கான் என யாராக இருந்தாலும் சரி" என்றார் ஆஷிஷ் நெஹ்ரா.
இம்ரான் தாஹிர்
அடுத்து இம்ரான் தாஹிர் போன்ற வயதான வீரர்கள் குறித்து பேசிய நெஹ்ரா, வயதான வீரர்கள் அதிக போட்டிகளில் ஆடி, அதிக பயிற்சியுடன் ஆட வருவது நல்ல விஷயம் என்றார். இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்த உடன் 18, 20 வயது வீரர் போல ஓடுவதை குறிப்பிட்டு, அவர் அர்ப்பணிப்பு தான் அதற்கு காரணம் என்றார்.