நாளை துவக்கம்
மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் தொடரான கரீபியன் பிரீமியர் லீக் நாளை முதல் துவங்கி வரும் செப்டம்பர் 10ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்கென அணிகள் கடந்த இரு வாரங்களாக குவாரன்டைனில் இருந்த நிலையில் பயிற்சி முகாம்களிலும் ஈடுபட்டன. இந்நிலையில் ட்ரினிடாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 7.30 மணிக்கு முதல் போட்டி நடைபெறவுள்ளது.
கீரன் பொல்லார்ட் -கிறிஸ் கிரீன் மோத தயார்
கடந்த ஆண்டின் ரன்னர் அப் அணியான குயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் 3வதாக வந்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கீரன் பொல்லார்டும் குயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக கிறிஸ் கிரீனும் மோதுவதற்கு தயாராக உள்ளனர்.
பெரிய அளவில் நடைபெறும் டி20
கடந்த 5 மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், பெரிய அளவில் நடைபெறும் முதல் டி20 தொடர் இது. இந்த தொடரில் உள்ள சில வீரர்கள் ஐபிஎல் போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளதால் அவர்களுக்கு இது மிகப்பெரிய பயிற்சியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நைட் ரைடர்ஸ் அணியில் முக்கிய வீரரான சுனில் நரேன் மற்றும் லென்டில் சிம்மன்ஸ் துவக்க ஆட்டக்காரர்களாக நாளைய போட்டியில் களமிறங்க உள்ளனர்.
நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு
இதேபோல குயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் பிரான்டன் கிங் மற்றும் சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளனர். நிக்கோலஸ் பூரன் விக்கெட் கீப்பராகவும் 5வது பேட்ஸ்மேனாகவும் களமிறங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. சிறப்பான வீரர்கள் இந்த அணியில் உள்ள போதிலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு நைட் ரைடர்ஸ் அணிக்கே அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.