ஐசிசி முடிவு தள்ளிவைப்பு
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022ம் ஆண்டிற்கு ஒத்திவைக்க ஐசிசி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்றைய ஐசிசி பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த முடிவை வரும் ஜூன் மாதம் 10ம் தேதிக்கு ஐசிசி ஒத்திவைத்துள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்பு
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால் பயங்கரமான நெருக்கடியில் சிக்க நேரிடும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சிஇஓ கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நாடுகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை அடுத்து டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
80 மில்லியன் ஆஸ். டாலர் இழப்பு
கொரோனாவால் கடந்த இரண்டு மாதங்களில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயங்கர நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடர் நடந்தாலும் நடைபெறாவிட்டாலும் 80 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்று அது கூறியுள்ளது. காலி மைதானங்களில் போட்டிகளை நடத்துவது உள்ளிட்ட காரணங்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
இந்நிலையில் வரும் டிசம்பர் 3ம் தேதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியின் பயணம் குறித்து ராபர்ட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக பிரிஸ்பேன், சிட்னி உள்ளிட்ட 4 இடங்களில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் இந்த திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.