ஐசிசி கூட்டத்தில் இன்று முடிவு
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளால் தொடரை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தொடரை ஒத்திவைக்க ஐசிசி பிரதிநிதிகள் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட உள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்
இந்நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாது என்றும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்தவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசியின் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் கமிட்டிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடிதம்
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் இஷான் மணி தலைவராக உள்ள இந்த கமிட்டியில் பிசிசிஐ உறுப்பினராக இல்லை. இந்நிலையில் இந்த கமிட்டிக்குதான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவும், அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2022ல் இந்தியாவும் நடத்த ஐசிசி அனுமதி வழங்கலாம் என்று அவர் தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஒரு ஆண்டுகால அவகாசம்
இதன்மூலம் கொரோனா பாதிப்பை சரிபடுத்திக்கொள்ள இந்தியாவிற்கு மேலும் ஒரு ஆண்டுகால அவகாசம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களின்மூலம் இந்தியா அதிக வருமானம் ஈட்டுவதாகவும், ஆஸ்திரேலியா நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவிற்கு விட்டு கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.