தடை விதிப்பு
சூதாட்டப்புகாரை அடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டே விளையாட வில்லை. பின்னர் திரைப்படத்தில் நடித்தார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது சீசனில் கலந்துகொண்ட ஸ்ரீசாந்த், அந்த நிகழ்ச்சியில் கூட தன்மீதான சூதாட்ட புகார் குறித்து வருந்தினார்.
தற்கொலை?
வெறும் 10 லட்சத்துக்காக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது மிகுந்த மனவேதனையை தந்ததாகவும், அந்த காலம் தமது வாழ்நாளின் இருண்ட காலம் என்றும் கூறினார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாகவும் கூறியிருந்தார்.
7 ஆண்டுகளாக குறைப்பு
இந்நிலையில், பிசிசிஐயின் குறைதீர்ப்பு அதிகாரி ஜெயின், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாக குறைத்துள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் ஸ்ரீசாந்தின் தடை முடிவடைகிறது. அதே தேதியில், 2013ம் ஆண்டு ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்கப்பட்டது.
வயது 37
7 ஆண்டுகளாக தடை குறைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் தடை முடிகிறது. இப்போது ஸ்ரீசாந்துக்கு வயது 36. தடை முடியும் போது 37 வயதாகிவிடும். எனவே தடை முடிந்தாலும் அவர் மீண்டும் கிரிக்கெட்டில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவே. ஆனால் இந்த தடை விலக்கல் அவருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும் என்று கூறலாம்.