ஏபி டிவில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட வீரர்களில் ஏ.பி.டிவில்லியர்ஸ் முக்கியமானவர். ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிரடி காட்டி தனக்கான தனி முத்திரை பதித்தவர். குறிப்பாக இவரின் ஆட்டத்திற்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரின் ஃபார்முக்கு இன்னும் 4 - 5 ஆண்டுகள் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாய்ப்பு மறுப்பு
சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் விளையாடி வந்த டிவில்லியர்ஸ், கடந்த 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மீண்டும் தென்னாப்பிர்க்க அணிக்காக விளையாட தயாராக உள்ளேன் என விருப்பம் தெரிவித்தார். ஆனால் அப்போது அவரை அணியில் சேர்த்துக்கொள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.
அணியில் சேர விருப்பம்
இந்த சூழலில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையில் டிவில்லியர்ஸ் நாட்டிற்காக மீண்டும் ஆட வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இதனை அந்த அணியின் பயிற்சியாளர் பவுச்சரும் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த டிவில்லியர்ஸ், தான் தயாராக இருப்பதாகவும், தென்ஆப்பிரிக்க அணியில் தான் விளையாட இடம் இருந்தால், அதனால் யாரும் பாதிப்படையாமல் இருந்தால், அதே வேளையில் தனக்கு உடற்தகுதி இருந்தால் நிச்சயம் ஆடுவேன் எனக்கூறியிருந்தார்.
ஐபிஎல்
இதற்கேற்றார் போல சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் தனது பழைய விஸ்வரூபத்தை டிவில்லியர்ஸ் காட்டியிருந்தார். 7 போட்டிகளில் ஆடிய அவர் 207 ரன்களை விளாசினார். இதனால் ஏ.பி.டிவில்லியர்ஸின் அதிரடியை நிச்சயம் டி20 உலகக்கோப்பையிலும் காணலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்துள்ளனர்.