ஜூலை 8ம் தேதி துவக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கப்பட உள்ளன. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 8ம் தேதி இங்கிலாந்தில் துவங்கவுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு துவங்கும் முதல் தொடர் இது என்பதால் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.
ஜோ ரூட் மகிழ்ச்சி
இந்நிலையில் பேஸ்புக்கில் லைவ் சாட்டில் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கும் ஜோ ரூட், இந்த தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டாலும், மீண்டும் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ரசிகர்கள் அதிகமாக பேசுவார்கள்
மீண்டும் கிரிக்கெட் போட்டியின் ரீஸ்டார்ட் பட்டன் அழுத்தப்பட்டால் ரசிகர்கள் அனைவரும் அதைப்பற்றி மட்டுமே சிலாகித்து பேசுவார்கள் என்று ஜோ ரூட் கூறியுள்ளார். தன்னுடைய 12வது வயதிலிருந்து தான் கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், ஆனால் இதுபோன்றதொரு பெரிய இடைவெளியை தான் கண்டதில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இந்த இடைவெளியில் கிரிக்கெட் போட்டிகளை தான் பெரிய அளவில் மிஸ் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது
தொடர்ந்து பேசிய ஜோ ரூட், வழக்கத்தைவிட தற்போது ஆடப்படும் இந்த போட்டிகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறினார். ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுவது மிகப்பெரிய வித்தியாசம் என்று அவர் கூறியுள்ளார். வீரர்கள் தங்களது வீடுகளிலேயே பயிற்சி மேற்கொண்டனர். ஆயினும் மீண்டும் விளையாடுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என்றார் அவர்.