பந்தை ஷைன் செய்யும் நடவக்கை
கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்கும்வகையில் பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்துவதற்கு தடை அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து பல்வேறு வீரர்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்தாலும், சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை வரவேற்கவே செய்கின்றனர். ஆயினும் அதற்கு மாற்றை கொண்டுவரவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
பௌலர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள்
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முன்னாள் பந்துவீச்சாளர் இர்பான் பதான் இந்த நடவடிக்கையை அமல்படுத்தினால் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார். இதைதவிர்க்கும்வகையில் பௌலர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை நிர்வாகிகள் முடுக்கிவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பௌலர்களுக்கு நெருக்கடி
மைதானத்தின் பிட்ச்கள் பௌலர்களுக்கு சாதகமாக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பந்தில் எச்சிலை பயன்படுத்தவில்லை என்றால் அது சரியாக ஸ்விங் ஆகாது என்றும், டெஸ்ட் போட்டிகளில் இது பௌலர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஷைன் செய்ய வேண்டியது அவசியம்
ஒருநாள் போட்டிகளில் இந்த தடை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆனால் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஸ்பின்னராக இருந்தாலும் பந்தை ஷைன் செய்ய வேண்டியது அவசியம் என்றும் பதான் கூறியுள்ளார். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினால், பந்தை ஷைன் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்றும் ஆனால் தற்போதைய சூழலில் ஒருசில பௌலர்களே இந்த வேகத்தில் பந்தை வீசிவருவதாகவும் பதான் குறிப்பிட்டுள்ளார்.