லண்டன் : இந்திய அணி தன் முதல் உலகக்கோப்பை லீக் போட்டிக்கான எந்த திட்டங்களையும் செய்யவில்லை என கூறியுள்ளார் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார்.
2019 உலகக்கோப்பை தொடரில் பயிற்சிப் போட்டிகள் முடிவடைந்து லீக் சுற்றுப் போட்டிகள் நாளை முதல் துவங்க உள்ளன. இந்தியா ஜூன் 5 அன்று தன் முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
எந்த அணியாக இருந்தாலும் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடரை துவங்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்கள். காரணம், முதல் போட்டியில் பெறும் வெற்றி வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து, மனம் தளராமல் உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ளச் செய்யும்.
தோனி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. பும்ரா ரொமான்டிக்.. இந்திய வீரர்களின் ரகசியங்கள் சொன்ன ஜடேஜா!
இது பற்றி பேசுகையில், எல்லோரும் உலகக்கோப்பையை வெற்றியோடு துவக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இப்போது நாங்கள் என்ன சிந்திக்கிறோம், திட்டமிடுகிறோம் என சொல்ல முடியாது. எங்களுக்கு ஒரு வாரம் உள்ளது. நாங்கள் பயிற்சியின் போது, நடக்கும் சந்திப்புகளில் தென்னாப்பிரிக்கா அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் திட்டமிடுவோம் என்று குறிப்பிட்டார்.
மேலும், தான் முன்பே இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு ஆடி இருப்பதால் தான் நம்பிக்கையோடு இருப்பதாக கூறினார் புவனேஸ்வர் குமார்.
இந்திய அணி தற்போது இரண்டு பயிற்சிப் போட்டிகளில் ஆடி முடித்துள்ளது. அதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது. எனினும், அதை ஈடுகட்டும் வகையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் நிறைய சாதக, பாதகங்கள் உள்ளன. குறிப்பாக, துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷிகர் தவான், இங்கிலாந்து ஆடுகளங்களில் துவக்க ஓவர்களை சமாளிக்க தடுமாறி வருகிறார்கள்.
இதற்கிடையே தான் இந்தியா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராக வேண்டும். புவனேஸ்வர் கூறுவது போல ஒரு வாரத்திற்குள் இந்தியா 11 வீரர்கள் கொண்ட உலகக்கோப்பை அணியை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
அதன்பின்பு தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு என தனி திட்டங்களை பற்றி சிந்திக்க வேண்டும். இந்தியா வெற்றியுடன் 2019 உலகக்கோப்பை தொடரை துவங்குமா?