தோனியின் ஆட்டம்
உலகக்கோப்பை தொடரில் தோனியின் ஆட்டம் சராசரிக்கும் மேல் தான் இருந்தது. இரண்டு அரைசதம் அடித்து இருந்தார். தோனி ரசிகர்களை பொறுத்தவரை தோனி அணிக்கு என்ன தேவையோ அதை செய்தார்.
கடும் விமர்சனம்
ஆனால், தோனி மந்தமாக ரன் சேர்த்ததாக அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. அவர் சுழற் பந்துவீச்சில் தடுமாறுகிறார் என்றும், வெற்றிக்கான நோக்கம் தோனியிடம் உள்ளதா எனவும் கேள்விகள் கேட்கப்பட்டன.
அரையிறுதிப் போட்டி
சில போட்டிகளில் தடுமாறி இருந்தாலும், விமர்சனங்களை மீறி மற்ற போட்டிகளில் அணிக்கு என்ன தேவையோ அதை தவறாமல் செய்து வந்தார் தோனி. அரையிறுதிப் போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தடுமாறிய போது தோனி, ஜடேஜாவுடன் இணைந்து அணியை மீட்கப் போராடினார்.
ரன் அவுட்
அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். 50 ரன்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் செய்யப்பட்டார். அது தான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஓய்வு வதந்திகள்
இதையடுத்து தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற வதந்திகள் வலம் வந்தன. இந்தியா தோல்வி அடைந்தாலும், ஜடேஜா - தோனியின் போராட்டம் மட்டுமே இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இந்த நிலையில், தோனி ஓய்வு குறித்து பேசப்பட்டதால், தோனி ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
கெஞ்சும் ரசிகர்கள்
ட்விட்டரில் #donotretiredhoni என்ற ஹேஷ்டேகில் தோனி ஓய்வு பெறக் கூடாது என தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். தோனி மீதான தங்கள் அன்பை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
|
நான்கு ஆண்டுகள் கழித்து..
தோனியின் தீவிர ரசிகர் போட்டுள்ள பதிவு அவர் மீதான ரசிகர்களின் அன்பு எத்தகையது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பதிவு "நான் என் ட்விட்டர் கணக்கை நான்கு ஆண்டுகள் முன்பு துவங்கினேன். ஆனால், இது தான் என் முதல் பதிவு. 100 கோடி மக்களின் இதயமாக இருக்கும் ஒருவருக்காக இங்கே வந்திருக்கிறேன். உங்கள் ஓய்வு குறித்து இப்போது எங்களால் யோசிக்கக் கூட முடியாது. டி20 உலகக்கோப்பை வரை விளையாடுங்கள் தோனி. இந்தியாவுக்கு நீங்கள் தேவை."