படு மோசம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கிடைத்த தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து இருந்தது. அந்தப் போட்டியிலும் படு மோசமாக சேஸிங் செய்து வெறுப்பேற்றியது தென்னாப்பிரிக்கா.
ரபாடா பற்றிய பேச்சு
அந்த தோல்விக்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் டு ப்ளேசிஸ். அப்போது ரபாடா உலகக்கோப்பை தொடரில் சரியாக பந்து வீசாதது குறித்து கேட்கப்பட்டது. உடனே மடை திறந்த வெள்ளம் போல கொட்டினார் டு ப்ளேசிஸ்.
ஆட வேண்டாம் என்றோம்
ரபாடாவை ஐபிஎல் தொடரில் ஆட வேண்டாம் என்று கூறினோம். உலகக்கோப்பைக்கு அப்போது தான் புதிதாக களமிறங்க முடியும் என்றோம். ஆனால், அது நடக்கவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் ஆடினார். சரி, குறைந்தபட்சம் பாதி தொடரில் இருந்தாவது அவரை நாட்டுக்கு திருப்பி அழைக்கலாம் என்று பார்த்தோம், அதுவும் முடியவில்லை என்றார் சிஎஸ்கே வீரரும், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனுமான பாப் டு ப்ளேசிஸ்.
ஓய்வு தேவை
ஐபிஎல் தொடருக்கு முன் நான் இது குறித்து பேசினேன். சில வீரர்கள் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுகிறார்கள். கூடவே, ஐபிஎல் தொடரிலும் ஆடுகிறார்கள். இது ஐபிஎல் பற்றியது இல்லை. சில வீரர்களுக்கு ஓய்வு தேவை. சில வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கு புத்துணர்வுடன் வரவில்லை. மேலும், ரபாடாவின் வேகம் அவரது இயல்பை விட கீழே இறங்கி உள்ளது என்றார் டு ப்ளேசிஸ்.
ஐபிஎல் காரணமா?
ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா அணி ஐபிஎல் தொடரில் காயமடைந்த மூத்த வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்னை இழந்தது. அதற்கு ஐபிஎல் தான் காரணம் அப்போது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், பாப் டு ப்ளேசிஸ்-உம ஐபிஎல்-ஐ சுற்றி வளைத்து குற்றம் சாட்டி இருக்கிறார். ஆனால், அதை அவர் சொல்வது தான் சிரிப்பாக இருக்கிறது.
இவர் என்ன செய்தார்?
மற்ற வீரர்களை ஐபிஎல் தொடரில் ஆட வேண்டாம் என்றும், உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒய்வு தேவை என்றும் கூறிய தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு ப்ளேசிஸ்-உம் அதே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இறுதிப் போட்டி வரை ஆடினார்.