ஆப்கானிஸ்தான் போட்டி
ஆப்கானிஸ்தான் போட்டியில் துவக்க வீரர்கள் ரோஹித் 1 ரன்னிலும், ராகுல் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் போனாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் இருக்கிறதே, நம்ம தோனி இருக்கிறாரே என நினைத்தனர் ரசிகர்கள். ஆனால், அடுத்து நடந்தது பெரிய சோதனையாக இருந்தது.
படுமோசம்
தோனி ஆடிய ஆட்டம் கடும் விமர்சனங்களை கிளப்பியது. அளவுக்கு மீறி டாட் பால் ஆடி சோதித்தார் தோனி. கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆடுவார் என எதிர்பார்த்த போது, ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதனால், ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீது விமர்சனம் எழுந்தது.
வெஸ்ட் இண்டீஸ் போட்டி
ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றி பெற்றதால், விமர்சனம் குறைந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் இந்தியா என்ன செய்யப் போகிறதோ என்ற கவலை அதிகரித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு நாளைப் போல, மற்றொரு நாள் இருக்காது. அவர்கள் என்ன செய்வார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. ஒரு தனி வீரர் கூட போட்டியை மாற்றி விடுவார்.
ரன் குவித்தே தீர வேண்டும்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா 300+ ரன்களை குவிப்பது அவசியம். அதற்கு தோனி உள்ளிட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கை கொடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடுகளத்தை காரணம் காட்டியது போல, வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் காட்ட முடியாது.
காரணம்
இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் போது, பேட்டி அளித்த இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பாரத் அருண், ஆப்கானிஸ்தான் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப மிடில் ஆர்டர் ஆடியது. அப்போது விக்கெட் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக மாறி இருக்கும் என காரணம் கூறி தோனியின் மோசமான இன்னிங்க்ஸ்-ஐ சமாளித்தார்.
நிலவரம் என்ன?
இந்திய அணி என்ன சமாளிப்பு சொன்னாலும், தோனி களத்தில் ஆடிக் காட்டினால் மட்டுமே விமர்சனம் குறையும். தோனி, கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் உள்ளிட்ட வீரர்கள் இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் போட்டி தவிர, பேட்டிங்கில் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை.
இது பலவீனமா?
அந்த ஒரு போட்டியும் விமர்சனத்தில் தான் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் இவர்கள் தங்களை நிரூபித்தே ஆக வேண்டும். அப்படி இல்லையென்றால், மற்ற அணிகள் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனத்தை எளிதாக பயன்படுத்திக் கொள்ளும்.