அணியில் மயங்க் அகர்வால்
விஜய் ஷங்கர் நீக்கத்தை அடுத்து, ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் களமிறங்கி வருகிறார். ஆனால், ஒருநாள் போட்டி அனுபவமே இல்லாத மயங்க் அகர்வாலை கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏன் அணியில் சேர்த்தார்கள் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
ராகுல் நிலை என்ன?
துவக்க வீரர் ராகுலுக்கு இங்கிலாந்து போட்டியின் போது லேசான காயம் ஏற்பட்டது. அதன் பின் அவர் வங்கதேசப் போட்டியில் பங்கேற்றார். அவருக்கு காயம் ஏதும் இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும், முன்னெச்சரிக்கையாக மாற்று துவக்க வீரராக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இலங்கை போட்டி
இந்தியா இன்னும் ஒரே ஒரு லீக் போட்டியில் மட்டுமே விளையாட உள்ளது. அடுத்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி மட்டுமே மீதமுள்ளது. இந்த நிலையில், மயங்க் அகர்வாலுக்கு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு அளித்து பரிசோதிக்கப்படும் என்கிறார்கள். அது அவரின் அறிமுகப் போட்டியாகவும் இருக்கும்.
குழப்பத்தில் மிடில் ஆர்டர்
தற்போது மிடில் ஆர்டர் தான் குழப்பத்தில் உள்ளது. அதை சரிசெய்ய, ராகுலை மிடில் ஆர்டரில் ஆடவைத்து, மயங்க் அகர்வாலை துவக்க வீரராக களமிறக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இலங்கைப் போட்டியில் மட்டும் தானா அல்லது அரையிறுதி, இறுதிப் போட்டியிலும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வாய்ப்பு யாருக்கு?
மயங்க் அகர்வாலுக்கு உலகக்கோப்பை தொடரின் இறுதிக் கட்டத்தில் வாய்ப்பு அளிப்பது சரியான முடிவு அல்ல. ஏற்கனவே அணியில் இருக்கும் ரிஷப் பண்ட், ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் துவக்க வீரராக களமிறங்கலாம். அதே போல, மிடில் ஆர்டரில் ஜடேஜா, தினேஷ் கார்த்திக்கை சேர்த்து பலப்படுத்தலாம் என்கிறார்கள்.
குழப்பத்தில் இந்திய அணி
ஜடேஜாவை அணியில் சேர்த்தால், குல்தீப் யாதவ் அல்லது சாஹலை அணியில் இருந்து நீக்க வேண்டும். இதனால், ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் எந்த வீரரை களமிறக்குவது என்ற குழப்பத்தில் உள்ளது இந்திய அணி.