இந்தியா - பாகிஸ்தான் போட்டி
இந்தியா - பாகிஸ்தான் போட்டி பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே துவங்கி, உப்புசப்பில்லாமல் முடிந்தது. போட்டியின் துவக்கம் முதல் இறுதி வரை இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. எந்த இடத்திலும் பாகிஸ்தான் அணி வெல்ல வாய்ப்பு உள்ளது என ஒருவராலும் கூற முடியாத அளவு ஆடி, 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான்.
இன்சமாம் என்ன செய்தார்?
இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் தேர்வுக் குழு தலைவர். அவருடைய வேலை சிறந்த 15 வீரர்களை தேர்வு செய்வது மட்டுமே. யாரை ஆட வைக்கலாம் என்பது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் வேலை. ஆனால், இதில் இன்சமாம் தலையிடுவதாக முன்பு இருந்தே புகார் உள்ளது. ஆனால், இந்த புகார்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நேரடியாக வரவில்லை என்பதால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கேள்வி
ஆனால், இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இன்சமாம், ஆடுகளத்தையும், பிட்ச்சையும் சோதனை செய்தார். இன்சமாமுக்கு மைதானத்தில் என்ன வேலை? தேர்வுக் குழு தலைவர் ஏன் அங்கே போகிறார்? என்று கேள்வி கேட்கிறார்கள் முன்னாள் வீரர்கள் சிலர்.
ஏன் உள்ளே விட்டீர்கள்?
மேலும், தேர்வுக் குழு தலைவர் வேலை பாகிஸ்தானில் அணியை தேர்வு செய்ததோடு முடிந்து விட்டது. அவர் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு செலவில் இங்கிலாந்து சென்றார். அவரை ஏன் அணியின் செயல்பாடுகளுக்குள் பங்கேற்க விட்டீர்கள்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
அடுத்து என்ன?
உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் அனேகமாக இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இருவரையும் பதவியை விட்டு தூக்கி விடுவார்கள் என்பதே இப்போதைய பேச்சாக உள்ளது.