ஜோஸ் பட்லர் அதிரடி
இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் கடந்த வருடத்தில் ஆடிய அதிரடி ஆட்டங்களுக்காக கிரிக்கெட் உலகில் பெரிய பிரபலமாக மாறினார். துவக்க வீரர், மிடில் ஆர்டர் என எந்த இடத்தில் இறங்கினாலும் வெளுத்து வாங்கினார். குறிப்பாக மிடில் ஆர்டரில் ஆடி, எதிரணிகளை துவம்சம் செய்து வந்தார்.
தோனியின் துவக்கம்
பலர் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டம், போட்டியை பினிஷிங் செய்யும் திறன் ஆகியவை தோனியின் துவக்க நாட்களை நினைவுபடுத்துவதாக கூறி வந்தார்கள். ஆனால், இருவரையும் அதிகம் ஒப்பிட்டு பேசியதில்லை.
புதிய தோனி
இந்த நிலையில், ஜோஸ் பட்லர் தான் அடுத்த தோனி என்று கூறி இருக்கிறார் ஜஸ்டின் லங்கர். அவர் கூறுகையில், "ஜோஸ் நம்ப முடியாத வீரர். அவர் பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்பிப் பார்ப்பேன். கிரிக்கெட் உலகின் புதிய தோனி அவர்" என்றார்.
டக் அவுட் ஆவார்
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விளையாட உள்ள நிலையில், "அவர் அந்தப் போட்டியில் டக் அவுட் ஆவார் என நம்புகிறேன்" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார் ஜஸ்டின் லாங்கர்.
இங்கிலாந்து நிலை
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடுத்த போட்டி மிக முக்கியமானது. ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை நேரடியாக உறுதி செய்ய முடியும்.
ஆஸ்திரேலியா வெல்லுமா?
ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு வெற்றி பெற்றால் கூட கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும். இங்கிலாந்து அணி பரம எதிரி அணி என்பதால், அந்த அணிக்கு எதிராக வென்றே தீர வேண்டும் என்ற வெறியும் அவர்கள் ஆட்டத்தில் இருக்கும்.