ராகுல் டிராவிட் உதவி
அப்படி தான் மோசமான பார்மில் இருந்த போது அதில் இருந்து மீள உதவி செய்த முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான ராகுல் டிராவிட் குறித்து தற்போது மறக்காமல் நினைவு கூர்ந்துள்ளார் ராகுல்.
தடையில் இருந்தார்
கடந்த ஆண்டு ராகுல் பார்ம் இழந்து தவித்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன் ஹர்திக் பண்டியாவுடன் இணைந்து, சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சிக்கினார். இதனால் சில வாரங்கள் தடையில் இருந்த அவர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.
முக்கிய காரணமாக இருந்த டிராவிட்
அப்போது இந்தியா ஏ அணிக்கு ஆடும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், மனதளவில் ராகுலை தயார்படுத்தி அவரது மோசமான பார்மில் இருந்து மீள முக்கிய காரணமாக இருந்தார்.
நம்பிக்கை
இந்தியா ஏ அணியில் ஆடிய ராகுல் சில அரைசதங்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்று சில அரைசதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார்.
சந்தேகம்
பின்னர், ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் அணிக்காக ஆடிய அவர், 14 போட்டிகளில் 593 ரன்கள் குவித்து அசர வைத்தார். உலகக்கோப்பை அணியிலும் இடம் பெற்றார். துவக்க வீரரான ராகுல், ரோஹித் சர்மா - தவானை தாண்டி அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.
சதம் அடித்த ராகுல்
அதே சமயம், அணியில் யாரை ஆட வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருந்த ஒரே இடம், நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கான இடம் மட்டுமே. அதற்கான தேர்வாக பயிற்சிப் போட்டியில் வாய்ப்பு பெற்ற ராகுல், வங்கதேச அணிக்கு எதிராக அடித்த சதம், அணியில் அவரது வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
என்ன செய்தார் டிராவிட்?
இந்த நிலையில் தான் டிராவிட் தனக்கு உதவியது குறித்து பேசியுள்ளார் ராகுல். அவர் கூறுகையில், ராகுல் டிராவிட் மனதளவில் என்னை தயார் செய்ய உதவினார். என் நம்பிக்கை அற்ற தன்மை, மற்றும் மோசமான பார்மில் இருந்து என்னை மீட்க உதவினார் என குறிபிட்டுள்ளார்.
வாய்ப்பு போச்சே!
ராகுல் அணியில் இடம் பெற்றதால், விஜய் ஷங்கர் தன் வாய்ப்பை இழந்துள்ளார். விஜய் ஷங்கர் ஒரே ஒரு பயிற்சிப் போட்டியில் மட்டுமே ஆடும் வாய்ப்பை பெற்றார். அதிலும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். ராகுலுக்கு அணியில் இடம் உறுதி செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.