லண்டன் : இந்தியா டுடே நடத்திவரும் சலாம் கிரிக்கெட் என்ற சிறப்பு கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்றனர்.
முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் கிளார்க், நாசிர் ஹுசைன் ஆகியோரிடம், விராட் கோலி, உலகக்கோப்பை தொடரை வென்றால் சிறந்த கேப்டன் என ஒப்புக் கொள்வீர்களா என கேட்கப்பட்டது.
இவர்கள் இருவருமே விராட் கோலியை சிறந்த கேப்டன் என நேரடியாக கூறவில்லை. மாறாக, கங்குலி, தோனி குறித்து தான் புகழ்ந்து பேசினார்கள். விராட் கோலியின் சிறந்த கேப்டன் என இருவருமே கூறவில்லை.
அதே போல, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், கங்குலி மற்றும் தோனி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன்கள். விராட் கோலி வளர்ந்து வரும் கேப்டன். ஒரு பேட்ஸ்மேனாக ஒருவர் கூட அவருக்கு அருகில் வர முடியாது. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஒருநாள் கிரிக்கெட்டில் கோலோச்சினர், இப்போது விராட் கோலி அருகில் யாரும் வர முடியாது என கூறினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசிர் ஹுசைன் கூறுகையில், விராட் கோலி நாட்டுக்காக போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவலை கொள்கிறார். ஒரு கேப்டனாக அது தான் அவரின் மிகப் பெரிய சொத்து. நான் சச்சினுக்கு மாற்றாக யாரும் வர முடியாது என நினைத்தேன். ஆனால், விராட் கோலி அதை எல்லாம் உடைக்கப் போகிறார் என்றார்.
மேலும் நாசிர் ஹுசைன் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் மாறியதற்கு முக்கிய காரணம் கங்குலி தான். அவர் மனிதர்களுடன் நண்பர்களாக பழக கவலைப்பட்டதே இல்லை. அவர் அணியை நல்ல கிரிக்கெட் ஆடும் நாடு என்ற நிலையில் இருந்து, வெற்றி தான் முக்கியம் என கருதும் அதிரடி அணியாக மாற்றினார் என்று குறிப்பிட்டார்.
ஆக மொத்தத்தில், மைக்கேல் கிளார்க், நாசிர் ஹுசைன் இருவரும் விராட் கோலியை நல்ல கேப்டன் என ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றால் கூட யாரும் விராட் கோலியை சிறந்த கேப்டன் என ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தான் தற்போதைய நிலைமையாக இருக்கிறது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஜூன் 5 அன்று தன் முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.