தென்னாப்பிரிக்கா திட்டம்
இந்தப் போட்டி மழையால் தடைப்பட்டு சுமார் 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. அதனால் இரு அணிகளுக்கும் 49 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என முடிவெடுத்த அந்த அணி 260-270 ரன்கள் எடுக்க முடிவு செய்து ஆடியது. துவக்க வீரர் டி காக் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டி
அடுத்து ஆடிய மூன்று பேட்ஸ்மேன்கள் ஹஷிம் ஆம்லா, மார்கிரம், பாப் டு ப்ளேசிஸ் மிகவும் பொறுமையாக டெஸ்ட் போட்டி போல ரன் சேர்த்தனர். ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே எடுத்து வந்தது. டஸ்ஸன், மில்லர் அதிரடியாக ஆட கடைசி 10 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் கிடைத்தது. தென்னாப்பிரிக்கா 49 ஓவர்கள் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெர்குசன் அசத்தல்
ஆம்லா 55, டஸ்ஸன் 67 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணியின் பெர்குசன் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார். அடுத்து நியூசிலாந்து அணி 242 ரன்களை சேஸிங் செய்தது.
ஹிட் விக்கெட்
குப்டில் 35 ரன்கள் எடுத்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். மன்றோ 9, ராஸ் டெய்லர் 1, டாம் லாதம் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கிராண்ட்ஹோம், கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். வில்லியம்சன் நிதானமாக ஆடினார்.
போட்டியில் பரபரப்பு
கடைசி 10 ஓவர்களில் 1 பந்துக்கு 1 ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை. கிராண்ட்ஹோம் 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். 11 பந்துகளில் 14 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் வில்லியம்சன் பொறுப்பாக ஆடி, கடைசி ஓவரின் இரண்டாம் பந்தில் சிக்ஸ் அடித்து தன் சதத்தை பூர்த்தி செய்தார். போட்டி சமன் ஆனது. அடுத்த பந்தில் ஃபோர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
மோசமான பந்துவீச்சு
தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் பெஹ்ளுக்வாயோ மிக மோசமாக பந்து வீசி ஓவருக்கு 8.5 ரன்கள் வாரி வழங்கி, தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். தென்னாப்பிரிக்கா அணி இந்த தோல்வியுடன் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.