என்ன நடக்கும்?
இந்திய அணி 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை அடுத்து 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அடுத்த ஓராண்டில் தயாராக உள்ளது. அது குறித்த விவாதம் நடைபெறும். அதற்கு முன் இந்திய அணியின் அரையிறுதி தோல்வி மற்றும் அணித்தேர்வு குறித்த கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட உள்ளன என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
உலகக்கோப்பை செயல்பாடு
இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி தவிர்த்து வெற்றிகளை வாரிக் குவித்து லீக் சுற்றில் முதல் இடம் பிடித்தது. எனினும், லீக் சுற்றிலேயே இந்திய அணியின் அணித் தேர்வு சலசலப்பை உண்டாக்கியது.
ராயுடுவுக்கு வாய்ப்பு இல்லை
குறிப்பாக, அம்பதி ராயுடு விவகாரம். ராயுடு உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா பங்கேற்ற ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் வரை இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். எனினும், அவருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை.
அம்பதி ராயுடு ஓய்வு
மாறாக, அவர் மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்தார். தவான், விஜய் ஷங்கர் காயமடைந்து அணியில் இருந்து நீக்கப்பட்ட போது, நியதிப்படி ராயுடுவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், அவர் திடீரென கிரிக்கெட்டில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார்.
கேள்விகள்
அம்பதி ராயுடு பார்மில் இல்லை என்று கூறப்பட்டாலும், அவரை ஏன் ஆஸ்திரேலிய தொடர் வரை அணியில் வைத்து இருந்தார்கள்? அதன் பின் ஏன் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றார்? அவருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்து இருந்தால், முன்பே அவர் இடத்தை வேறு இளம் வீரர்களுக்கு கொடுத்து பரிசோதித்து இருக்கலாமே? என பல கேள்விகளுக்கு கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
தோனி பேட்டிங் வரிசை
அடுத்த சர்ச்சை, அரையிறுதிப் போட்டியில் தோனி ஏழாவது இடத்தில் களமிறங்கியது. அந்தப் போட்டியில் இந்தியா விரைவாக விக்கெட்களை இழந்து வந்த போது தோனியை அனுப்பி விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தாமல், அதிரடி வீரர்களை அனுப்பி வைத்தது யார் என்ற கேள்வி கேட்கப்பட உள்ளது.
சிக்கலில் ரவி சாஸ்திரி
அந்த முடிவை எடுத்தது ரவி சாஸ்திரி தான் என சிலர் கூறி வருகிறார்கள். சிலர் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தான் அந்த முடிவை எடுத்தார் என்கிறார்கள். இவர்கள் இருவரும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். கேப்டன் கோலி தோனியை ஏன் முன்பே களமிறக்கும் முடிவை எடுக்கவில்லை? என்ற கேள்வியும் கேட்கப்படும் என்கிறார்கள்.