பண்ட்டுக்கு வாய்ப்பு
தவான் காயமடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றார். ரிஷப் பண்ட்டுக்கு பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. விஜய் ஷங்கர் நீக்கப்பட்ட பின் இங்கிலாந்து போட்டி முதல் ரிஷப் பண்ட் களமிறங்கி வருகிறார்.
ரிஷப் பண்ட் பேட்டிங்
மூன்று போட்டிகளில் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் இலங்கை போட்டி தவிர்த்து மற்ற இரண்டு போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 ரன்களும், வங்கதேச அணிக்கு எதிராக 48 ரன்களும் எடுத்தார்.
பீல்டிங் மோசம்
பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், ரிஷப் பண்ட்டின் பீல்டிங் மிகவும் மோசமாக உள்ளது. விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவதில்லை. தோனி கீப்பிங் செய்து வருவதால், பண்ட் பீல்டிங் செய்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார். அவரது பீல்டிங் மோசமாக இருந்தாலும், இந்திய அணி அவரை மூன்று லீக் போட்டிகளில் பயன்படுத்தியது.
பயிற்சியாளர் கருத்து
இது குறித்து இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறுகையில், ரிஷப் பண்ட் பீல்டிங்கில் நிறைய பயற்சி செய்ய வேண்டும். அவரது டெக்னிக் மற்றும் பந்து எறிதல் முன்னேற வேண்டும். அவுட்பீல்டராக அவர் இருக்க வேண்டும் என்றால் தடகளப் பயிற்சிகள் தேவை என்றார்.
தினேஷ் கார்த்திக் பீல்டிங் எப்படி?
அதே சமயம், தினேஷ் கார்த்திக் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். கடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி தினேஷ் கார்த்தி, ரிஷப் பண்ட் இருவரையும் அணியில் ஆட வைத்தது. அரையிறுதியில் ஜடேஜாவை அணியில் சேர்க்கும் திட்டம் இருப்பதால், இவர்கள் இருவரில் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டும்.
வாய்ப்பு பறிபோகும்
அதன்படி பார்த்தால், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் அணியில் நீட்டிக்கப்பட்டு, ரிஷப் பண்ட் வாய்ப்பை இழக்கலாம். அதற்கு அவரது மோசமான பீல்டிங் தான் காரணம். ஆனால், கேப்டன் கோலி ரிஷப் பண்ட்டின் பேட்டிங் அணிக்கு தேவை என்று நினைத்தால் இந்த முடிவில் மாற்றம் இருக்கலாம்.